Skip to main content

சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி; மதுரையில் பரபரப்பு

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 finance company in Madurai has cheated people of money

 

"எங்க பணத்த புடுங்கிட்டு எங்களுக்கே நோட்டீஸ் அனுப்புறாங்க" என பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை ஏமாந்த பொதுமக்கள் கண்ணீரோடு கமிஷனர் ஆபிசில் புகார் அளித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாநகர் பசுமலை பகுதியில் ஜே.ஆர்.ஜே மார்க்கெட்டிங் என்ற பைனான்ஸ் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெயராஜ் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது நிறுவனத்தில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பயன்படுத்தி ஒரு பவுன் தங்கக்காசு வாங்கிக் கொள்ளலாம் எனவும், மேலும் அதில் கிடைக்கும் லாபத்தில் மாதம் 7500 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

 

இதை உண்மை என நம்பிய பொதுமக்கள், மதுரை மாநகரைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் முப்பதாயிரம் ரூபாய் முதல் பல லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து, முதலீடு செலுத்தியவர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மாதம்தோறும் லாப பணமாக 7500 ரூபாய் வழங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், கடந்த மூன்று நான்கு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு லாப பணம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அந்நிறுவனத்தின் தலைவரான ஜெயராஜ் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது, உங்களுடைய பணம் விரைவில் வரும் எனக் கூறியுள்ளார். ஆனால், தொடர்ச்சியாக பல மாதங்கள் ஆகியும் லாப பணம் வராத நிலையில், தங்களுக்கு லாப பணம் வேண்டாம் தாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

 

அந்த சமயத்தில், உங்களுடைய பணத்தை திருப்பித் தருவதாக கூறி, டெபாசிட் செலுத்தியதற்கான சீட்டுகளை பெற்றுக்கொண்ட நிலையில், தாங்கள் தான் பணத்தை திரும்ப தர வேண்டும் என டெபாசிட் செய்தவர்களின் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த பைனான்ஸ் நிறுவனம் மீது மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் மதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.