Skip to main content

வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை! கோட்டாட்சியர் விசாரணை! 

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

CUDDLAORE DISTRICT PREGNANT INCIDENT POLICE INVESTIGATION

 

கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள ஓணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள் வினிதா (25), எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தெருவைச் சேர்ந்த சேட்டு என்பவரது மகன் ராஜன் (32) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வினிதா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  
 


இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த ராஜன் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்ததுடன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினமும் (20/05/2020) குடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ராஜன் தனக்குப் பணம் வேண்டும் எனத் தகராறு செய்துள்ளார். 

இதனால்  விரக்தியடைந்த வினிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

 


ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (21/05/2020) பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம் சிகிச்சையின்போது வினிதா நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகமாக வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வினிதாவின் மரணம் குறித்து அவரது தாயார் செல்வி குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 'திருமணத்தின்போது வினிதாவுக்கு சீர்வரிசையாக 20 பவுன் நகை, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் கொடுத்ததாகவும், மேலும் காருக்குப் பதிலாக ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ராஜனுக்கு புதிதாக பைக் வாங்கித் தருமாறு ராஜனின் பெற்றோர் தங்களிடம் வலியுறுத்தினர் என்றும், அதற்கு நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறோம் என்று கூறிய நிலையில், அதை ஏற்காமல் உடனடியாக வாங்கித் தர வேண்டும் என்று தனது மகளிடம் ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த வினிதா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று குறிப்பிட்டு, ராஜனின் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

http://onelink.to/nknapp


அந்தப் புகாரின் பேரில் வனிதாவின் கணவர் ராஜன், அவரது தந்தை தந்தை சேட்டு, தாயார் கஸ்தூரி, சகோதரர் ராமச்சந்திரன், சகோதரிகள் ராஜேஸ்வரி, அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார் ராஜனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து நெய்வேலி டி.எஸ்.பி லோகநாதன் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார். வினிதாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் கடலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.