Skip to main content

'வேளாண் விற்பனை கூடங்கள் மற்றும் சர்க்கரை ஆலை ஏப்ரல் 15- ஆம் தேதி முதல் இயங்கும்'- கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! 

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை 15.04.2020 முதல் வழக்கம்போல் செயல்படும் எனக் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "கரோனா நச்சுயிரி தாக்குதலிலிருந்து பொதுமக்களைக் காக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு, குறிப்பாக விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 

CUDDALROE DISTRICT COLLECTORS ANNOUNCEMENT


கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மணிலா மற்றும் உளுந்து, நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த விளைபொருட்களை விவசாயிகள் உரிய காலத்தில் விற்பனை செய்யும் வண்ணம் கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை துறையின் கீழ் செயல்படும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் விவசாயிகளின் நலன் கருதி வரும் 15.04.2020 முதல் செயல்பட துவங்கும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

எனவே, விவசாயிகள் சமூக நலன் கருதி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய வரும்போது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும், பொது இடைவெளியைக் கடைபிடித்தும் வணிகம் மேற்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

http://onelink.to/nknapp



மேலும், நெல்லிக்குப்பத்திலுள்ள ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி வரும் 15.04.2020 முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரும்பு விவசாயிகள் கரும்பு வெட்டும்போதும், அதனை ஆலைக்கு எடுத்து வரும்போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சர்க்கரை ஆலையினர் மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளித்து நல்ல முறையில் கரும்பு அறவை மேற்கொண்டு பயன்பெறவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.