தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்றுடன் அதன் இரண்டாண்டு ஆட்சியை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், ‘ஈடில்லா ஆட்சி; இரண்டு ஆண்டே சாட்சி’ எனும் தலைப்பில் திமுக சார்பிலும், அரசு சார்பில் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில், இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல் வாக்களிக்காதோருக்கும் சேர்த்து ஆட்சி செய்கிறோம். ஓட்டு போடாதவர்களும் வருந்தும் அளவிற்கு நல்லாட்சியை கொடுத்துவருகிறோம். விமர்சனங்களை புறம் தள்ளிவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்சி செய்துவருகிறேன்” என்றார்.