Vijayaprabhakaran continues to lead in Virudhunagar constituency!

Advertisment

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 295 தொகுதிகள் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 228 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி திமுக 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயபிரபாகரனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், 11.10 மணி நிலவரப்படி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக விஜய பிரபாகரன் 6200 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.