Skip to main content

இளம்பெண்ணை ஏமாற்றியவரின் உடல் கரை ஒதுங்கியது!

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

Complaint cheating young girl in Virugambakkam

 

விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் நிஷாந்த் என்பவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தான் 10 ஆம் வகுப்பு படித்ததில் இருந்து 13 ஆண்டுகளாக நிஷாந்துடன் காதலித்து வந்ததாகவும், இந்த நிலையில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன்  திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ரூ. 60 லட்சத்திற்கும் மேல் தன்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார் என்றும், இதற்கு நிஷாந்தின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் தன்னைப் போலவே நிஷாந்த் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் எனவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

 

இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நிஷாந்த் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்சோ வழக்கும் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான நிஷாந்தை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நண்பர்கள் மற்றும் பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் போரூர் ஏரியில் குதித்ததாகக் கூறப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் போரூர் ஏரிக்குச் சென்று பார்த்தபோது நிஷாந்தின் கார், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால், அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று அவரது உடலை ஏரியில் தீவிரமாகத் தேடி வந்தனர்.  கடந்த இரண்டு நாட்களாகத் தேடியும் கிடைக்காத நிலையில், இன்று போரூர் ஏரியின் கரையில் நிஷாந்தின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து நிஷாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்