Skip to main content

கனிமொழிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கு! - வாக்காளரே நடத்தலாம் என உத்தரவு! 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி. ஆவார். அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை, தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பதிலாக, அத்தொகுதியின் வாக்காளரான முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 
 

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் பா.ஜ.க.  வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கபட்டதால், தேர்தல் வழக்கைத் திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார். 
 

chennai high court thoothukudi MP kanimozhi case judge order


பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதைத்   தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி எஸ். எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
 

அப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழிசைக்குப் பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்தவுள்ள முத்துராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராகவும்  இருக்கிறார். ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் தி.மு.க வுக்கு எதிராக புகாரும் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்தவர். இந்தத் தகவல்களை மறைத்து முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’என வாதிட்டார்.

chennai high court thoothukudi MP kanimozhi case judge order


மனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   ‘வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர, வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்காளர் தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும்’என வாதிட்டார்.
 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம்  அத்தொகுதியின் வாக்காளர் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால்,  இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளது. அவர்,   தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாகத் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்தலாம்.’என்று அனுமதியளித்து உத்தரவிட்டார்.

chennai high court thoothukudi MP kanimozhi case judge order


மேலும், ‘தேர்தல் வழக்குகள் என்பது, சம்பந்தப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தான்,  அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுகிறது. அதனால், இந்தத் தேர்தல் வழக்கை விரைந்து முடித்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’ என நீதிபதி அறிவுறுத்தினார்.
 

கனிமொழி தரப்பில்‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றால், எதிர்மனுதாரருக்கு வழக்குச் செலவை வழங்கவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற்ற தமிழிசை சவுந்தரராஜன், தனக்கு தேர்தல் வழக்குச் செலவை வழங்க வேண்டும்’ என முறையிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி,‘தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் தமிழிசை தனது தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். அதனால், வழக்குச் செலவுத் தொகையினை வழங்க தேவையில்லை’என உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.