தமிழக முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்ற போது அவர் உடுத்தியிருந்த உடை குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் கடந்த 24 ஆம் தேதி துபாய் சென்று இன்று அதிகாலை தமிழகம் திரும்பினார். இந்தநிலையில் துபாய் செல்லும்பொழுது தமிழக முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் 17 கோடி ரூபாய் மதிப்புடையது என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவியது. இந்த தகவலை தமிழக காவல்துறையின் பார்வைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொண்டுசென்ற நிலையில் போலியான தகவலை பரப்பியதாக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அருள் பிரசாத்தை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவதூறான தகவலை பரப்புவது, அவதூறான தகவல் மூலம் பதற்றத்தை ஏற்படுத்துவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் செயல்படுவது என மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.