அனிதா மருத்துவம் பயில ஆசைப்பட்டது தவறா? மோடி அரசுக்கு சாவு மணி அடிப்போம் என ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு நடைபெற்ற +2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார் அரியலூரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா. மருத்துவராகும் கனவோடு படித்து, இவ்வளவு மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் இவருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கொடுக்கப்படவில்லை.
மருத்துவராகும் தனது கனவு தகர்ந்ததால் மனமுடைந்த மாணவி அனிதா தன் உயிரை நேற்று (02.09.2017) மாய்த்துக்கொண்டார்.
இவரைப்போன்ற பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவு இந்தியாவின் நீட் தேர்வால் பறிக்கப்படுகிறது. அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை இரத்து செய்யக்கோரியும் புதுச்சேரி ஒதியஞ்சாலையிலுள்ள அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அனிதாவின் சாவுக்கு நீதி வழங்க வேண்டியும், நீட் தேர்வை இரத்து செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
-சுந்தரபாண்டியன்