மாணவி அனிதா தற்கொலை - மாணவர்கள் போராட்டம்; மெரினாவில் போலீசார் குவிப்பு
மாணவி அனிதா தற்கொலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடந்தது. ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்துகொண்டதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது.
சென்னையில் திராவிடர் மாணவர்கள் கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி உள்பட 15 மாணவர்கள் நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். எனவே இதனை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த மாணவ-மாணவிகள் பெருந்திரளாக மெரினா கடற்கரையில் குவிய வேண்டும் என்று ‘வாட்ஸ்-அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.
இதனால் மெரினா கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் யாரும் நுழைந்துவிடாத வகையில் மெரினா கடற்கரை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.