எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23 ஆம் நடந்த பொதுக் குழுவில் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக் கூட்டம் கூடக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையையும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.