Skip to main content

கொலையில் முடிந்த வாய்த்தகராறு... தப்பி ஓடிய உறவினர்கள்!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Argument that ended in incident, relatives who escaped

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கிளாப்பாக்கம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமன், சீனிவாசன், சிவக்கொழுந்து ஆகிய மூன்று சகோதரர்களுக்கு இடையே தங்கள் மூதாதையர்கள் சம்பாதித்து வைத்த சொத்துக்களைப் பாகம் பிரிப்பது சம்பந்தமாக சில ஆண்டுகளாகவே தகராறு நடந்துவந்துள்ளது. இது தொடர்பாக அண்ணன் தம்பிகளுக்குள் அடிக்கடி சண்டை, பிரச்சனை, சச்சரவு என தொடர்ந்து நடந்துவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (11.11.2021) மாலை சீனிவாசன், சிவக்கொழுந்து ஆகிய இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது.

 

அப்போது வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஆத்திரமடைந்த சீனிவாசனும் அவரது உறவினர்களும் சேர்ந்து மரக்கட்டையை எடுத்து சிவக்கொழுந்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிவக்கொழுந்து, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அவரது அண்ணன் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிவக்கொழுந்துவை மீட்டு சிகிச்சைக்காக சிறுவாடி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவக்கொழுந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துபோனதாக தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து மரக்காணம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து டிஎஸ்பி அருண்குமார், இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் சிவகொழுந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், கொலைக்கு காரணமான சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறில் தம்பியை அண்ணனே அடித்துக் கொலைசெய்த சம்பவம் மரக்காணம் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.