Skip to main content

திமுக பிரமுகருக்கு அதிமுக வழக்கறிஞர் ஆஜர்! 

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
ADMK lawyer appeared for DMK member

டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிவன் கோவில்களில் ஆரூத்ரா தரிசனம் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலும் பெருவிழாவாக நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூத்ரா தரிசனம் காண வருகை தந்திருந்தனர்.

கோவிலுக்குள் ஆருத்ரா தரிசனத்தை ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் வணங்கிக் கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் காவல்நிலைய ஆய்வாளரும், வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பொறுப்பில் உள்ள காந்திமதி பக்தர்களை ஒழுங்குபடுத்தி சுவாமி தரிசனம் செய்து வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் தம்பியும், திமுக முன்னாள் நகர மன்றத் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதர் துணைவியார் சிவசங்கரி, சுவாமிக்கு நேராக நின்று நீண்ட நேரம் சுவாமி கும்பிட்டதால் பின்னால் இருந்த பக்தர்களுக்கு சுவாமி தெரியவில்லை எனக் கத்தியுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் காந்திமதி, கொஞ்சம் தள்ளி நின்னு பாரும்மா பின்னாடி இருக்கறவங்களுக்கு மறைக்குதுல எனச் சொல்லியுள்ளார். துணைவியாருடன் வந்திருந்த ஸ்ரீதர், என் மனைவியை எப்படி நீங்க தள்ளி நிற்கச் சொல்லலாம் என பெண் காவல் ஆய்வாளர் காந்திமதியிடம் ஒருமையில் பேசியுள்ளார். பதிலுக்கு காவல் ஆய்வாளரும் ஸ்ரீதரிடம் ஒருமையில் பேசியதும், சிவசங்கரி, காந்திமதியின் கன்னத்தில் பளாரென அடித்துள்ளார். ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் கோவிலில் பெண் காவல் ஆய்வாளரை ஸ்ரீதர் துணைவியார் அடித்து எச்சரித்து மிரட்டியுள்ளார். அப்போது கோவில் ஊழியரான ஒருவர் ஸ்ரீதருடன் சேர்ந்து ஆய்வாளரை தள்ளிவிட்டுள்ளார். இது நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்பு நடந்தது ஆய்வாளருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADMK lawyer appeared for DMK member

இந்த விவகாரத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி பணி செய்யாமல் தடுத்தல், தாக்குதல், பெண் வன்கொடுமை பிரிவு என சில பிரிவுகளின் கீழ் ஸ்ரீதர், அவரது துணைவி சிவசங்கரி மற்றும் கோவில் ஊழியர் ஒருவர் என 3 பேர் மீது நகர காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஸ்ரீதர், அவரது துணைவியார் மற்றும் கோவில் ஊழியரை கைது செய்யாமல் போலீஸ் வைத்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீதர் தலைமறைவாக இருந்து வருகிறார். கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார் ஸ்ரீதர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அதே மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் ஸ்ரீதரன்.

இந்த ஜாமீன் மனு மீது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியின் மாவட்டச் செயலாளரும், அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞராக இருந்த அன்பழகன் ஆஜராகவுள்ளார் என்கிற தகவல் நீதிமன்ற தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.

திமுக பிரமுகர் வழக்கில் அதிமுகவின் மாவட்ட அளவிலான பிரபல வழக்கறிஞர் ஆஜராவது திமுக வழக்கறிஞர் அணி வழக்கறிஞர்கள், திமுக பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்