Skip to main content

கூட்டாண்மை படிப்புகள்: பல்கலை.கள் தனியார்மயமாக வழி வகுக்கக்கூடாது - ராமதாஸ்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

ramadoss

 

கூட்டாண்மை முறையில் நடத்தப்படும் பாடங்களைப் படிப்படியாக பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்திக் கொண்டு புதிய படிப்புகளை வழங்க ஆயத்தமாகி வருகின்றன. புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, அவை பல்கலை.களின் தனியார்மயத்திற்கு வழிவகுத்து விடும் என்பது தான் கவலையளிக்கிறது.


அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ஆகியவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில், புதிது, புதிதான படிப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. மற்றொருபுறம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளின் அடிப்படையில், மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான படிப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

 

அதுமட்டுமின்றி, சில தொழில்படிப்புகளையும், தொழில்நுட்பப் படிப்புகளையும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்துதான் வழங்க வேண்டியுள்ளது. இவை தவிர்க்க முடியாதவை. அப்படிப்புகளை பல்கலைக்கழகங்கள் முதன்மைப் பொறுப்பு ஏற்று நடத்தும்பட்சத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், மற்ற நிறுவனங்களுடன்  கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு புதிய படிப்புகளை வழங்குவது தான் சிக்கலை உருவாக்குகிறது.

 

பல பல்கலைக்கழகங்களில் புதிதாக தொடங்கப்படும் படிப்புகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள்  நடத்துவதில்லை. மாறாக, புதிய படிப்புகளை நடத்துவதற்கான வகுப்பறைகள், மேசை & நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடங்கள், ஆய்வகத்திற்கான இடம் ஆகியற்றையும், படிப்புக்கான சான்றிதழ்களையும் மட்டும் தான் பல்கலைக்கழகங்கள் வழங்கும்.

 

Ad

 

படிப்புக்கான பாடநூல்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றையும், ஆய்வகக் கட்டமைப்புகளையும் தனியார் தொழில் நிறுவனங்கள் வழங்கும். படிப்புக்கான கட்டணத்தை தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன; அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வசூலித்துக் கொள்ளும். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்தில் 60 விழுக்காட்டை அந்த நிறுவனங்கள் எடுத்துக் கொண்டு, 40 விழுக்காட்டை மட்டும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்குகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பல்கலைக்கழகங்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உள்வாடகைக்கு வழங்கும் கலாச்சாரம் நாடு முழுவதும் உருவாகி வருகிறது; தமிழக பல்கலைக்கழகங்களும் இதற்கு தப்பவில்லை.

 

கூட்டாண்மையில் படிப்புகளை வழங்குவது பல்வேறு வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், கூட்டாண்மை முறையில் தனியாரால் வழங்கப்படும் படிப்புகளுக்கு ரூ.1,00,000 வரை ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளநிலை தொழிற்படிப்புக்கு (B.Voc. AR/VR Programme) ஆண்டுக்கட்டணமாக ரூ.49 ஆயிரமும், முதுநிலை தரவு அறிவியல் (M.Sc. Data Science) படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ. 1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அதன் இணையதளத்திலேயே வெளியிட்டுள்ளது.

 

இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களால் இத்தகைய படிப்புகளைப் படிக்க முடியாமல் போய்விடும். மேலும், மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. தனியார் நிறுவனங்களே தங்கள் விருப்பப்படி மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதால் புதிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இப்போது ஒரு சில படிப்புகளில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் இந்த அணுகுமுறை, இனி வரும் காலங்களில் விரிவுபடுத்தப்படும் போது, தனியார் பல்கலைக் கழகங்களுக்கும், அரசு பல்கலைக்கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு இது முதல்படியாக இருக்கும் என்பது உறுதி.

 

பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே ஏழைகளுக்குத் தரமான கல்வி இலவசமாகவோ, குறைந்தக் கட்டணத்திலோ வழங்கப்பட வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டில் அரசு பல்கலை.களும், அரசு கல்லூரிகளும் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் தான் ஏழை மாணவர்களும் கல்வி பெற முடிகிறது; உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடிக்க முடிகிறது. இச்சூழலை மாற்றி, பல்கலைக்கழகங்களில் தனியார் நிறுவனங்கள் படிப்புகளை நடத்துவதை ஊக்குவித்தால், காலப்போக்கில் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாகும்; அங்கு ஏழைக்கு கல்வி கிடைக்காது.

 

Nakkheeran

 

பல்கலைக்கழகங்கள் இப்படி மாறுவதற்கு காரணம்... அவற்றின் செலவுகள் அதிகரித்து விட்டதும், அவற்றுக்கும் அரசு வழங்கும் மானியம் குறைந்து விட்டதும் தான். புதிய படிப்புகளையும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்கும் அளவுக்கு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அதிகரித்தால் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாவதை தடுக்க முடியும். இதை உணர்ந்து கூட்டாண்மை முறையில் நடத்தப்படும் பாடங்களை படிப்படியாக பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும்; அதன்மூலம் பல்கலைக்கழகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்விக்கோயிலாக தொடர்ந்து திகழ்வதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.