Skip to main content

“அதிமுக எனும் ஆலமரத்தை வீழ்த்தி குளிர்காய்கிறது பாஜக- உமர் பாரூக் விமர்சனம் 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

spdi umar faruk talk about admk and bjp

 

பாரதிய ஜனதா கட்சி என்கிற ஆக்டோபஸ் அதிமுக என்ற ஆலமரத்தை வீழ்த்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தெரிவித்துள்ளார். 

 

எஸ்டிபிஐ கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் அடுத்த பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ஸாலாஹூத்தீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த உமர் பாரூக், “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எங்கள் மாநில தலைவரைச் சந்தித்து ஆதரவு கேட்டதால் எஸ்டிபிஐ கட்சி எடுத்த முடிவின்படி இடைத் தேர்தலில் களம் இறங்கி பணியாற்றும். மத்திய பட்ஜெட் உப்பு புளி இல்லாத மக்கள் நலனின் அக்கறை இல்லாத பட்ஜெட் ஆக உள்ளது. அதானி இந்த நாட்டை சூறையாடியது. உலக அரங்கில் பிரதமர் மோடியை பற்றி குஜராத் கலவர வழக்கு  மூலம் அவரைப் பற்றிய உண்மை தகவல் வெளிவந்து விட்டது. இந்த வேளையில் எதையாவது கூறி பட்ஜெட்டில் திசை திருப்ப நினைத்தும் அதில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது” என்றார்.

 

காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு பதிலாக பிபிசி ஆவணப்படம் வெளி வந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “காஷ்மீர் பைல்ஸ் கற்பனையான ஒரு திரைப்படம். ஆனால் பிபிசி வெளியிட்டுள்ளது உண்மைகளின் அடிப்படையில் வெளியிட்ட உள்ள ஒரு ஆவணம்” எனப் பதிலளித்தார். 

 

மேலும், “அதிமுகவை பற்றி குறிப்பிடும் போது எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட அந்த ஆலமரமாகிய  அதிமுகவை பிஜேபி என்கிற ஆக்டோபஸ் வீழ்த்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பிஜேபியை விரும்பினாலும் அதிமுக தொண்டர்கள் பிஜேபியை விரும்ப மாட்டார்கள். இன்று அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஒரு பலமான கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எஸ்டிபிஐ கட்சியின் விருப்பம். எனவே ஓபிஎஸ், இபிஎஸ்ஸும் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.