Skip to main content

ஸ்டாலின் திமுகவின் தலைவரானது பெரிய சாதனை, ஏன்னா... ! - சீமான் கிண்டல்  

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் மறைந்து, நேற்று அந்தக் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மாநில அரசை முதுகெலும்பில்லாத அரசு என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான், ஸ்டாலினையும் திராவிட அரசியலையும் விமர்சித்துப் பேசினார். அவர் பேசியது... 

 

seeman



"திராவிட முனேற்றக் கழகத்தின் புதிய தலைவராக ஐயா ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். ஒரு தலைவரின் மகன் மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சு தலைவர் ஆகியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் இப்படித்தான் பேசுகிறார் 'படிப்படியாக, உழைத்து, கஷ்டப்பட்டு தலைவர் ஆகியிருக்கிறேன்' என்று ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய சாதனை!!! அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் தலைவரானது சாதனையாம்... ஏன்னா அவரு படிப்படியா வந்தாராம்.

'தமிழ் இனமே உனக்காக நான் உயிர் உள்ள வரை பாடுபடுவேன்' என்று அவர் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் இனவாதிகள், ஃபாசிஸ்ட்டுகள், தூய இனவாதிகள் என்பார்கள். கலைஞர் ஐயாவே  'நாமெல்லாம் தமிழர் என்ற உணர்வை பெற வேண்டும்' என்று ஒரு மேடையில் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் அது குற்றமாகிறது. ஏன் அவர்கள் 'திராவிட இனமே உனக்காக நான் பாடுபடுவேன்' என்று சொல்லவில்லை? ஏன் என்றால் இங்கே யாரும் திராவிடர்கள் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். இதுவரை அங்கு யாருக்கும் திராவிடம் என்றால் என்னவென்ற சரியான தெளிவு, சரியான பதில் எதுவும்  இல்லை. முதலில் ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்றார்கள், திராவிடம் என்று இல்லாமல் தமிழர் என்று இருந்திருந்தால் பிராமணர்கள் 'நாங்களும் தமிழர்' என்று கட்சியில் சேர்ந்துவிடுவார்கள் என்றுதான் இவர்கள் காரணம் சொன்னார்கள். ஆனால் என் கட்சியில் ஒரு பிராமணனும் இல்லையே, நானும் 'தமிழன்' என்றுதான் பெயர் வைத்துள்ளேன். ஆனால் முப்பத்திஐந்து ஆண்டுகளாக ஒரு பிராமண பெண் அந்த திராவிட கட்சிக்கு தலைவராக இருந்துவிட்டு போனார். யாரை சொல்லுகிறேன் தெரிகிறதா?

 

 


திராவிட சுடுகாட்டில் மூன்று பேர் படுத்திருக்கிறார்கள், அவர்களுடன் அந்தப் பெண்மணியும் படுத்திருக்கிறார்கள். நல்லவேளை அதில் காமராஜருக்கு இடம் தரவில்லை. அந்த திராவிட சுடுகாடு நமக்கு தீண்டத்தகாத இடம், அங்கேதான் இவர்கள் எந்த ஆரியத்தை எதிர்த்து புரட்சி செய்தர்களோ அதே ஆரியத்தை சேர்ந்த பெண்மணியும் இருக்கிறார். அவர்களுடன்தான் இவரும் படுத்திருக்கிறார். ஆரியத்தை எதிர்க்க வந்த திராவிடம் மண்டியிட்டுக் கூட நிற்கவில்லை, அப்படி நின்றியிருந்தால்கூட தாண்டி போவது கடினம். இப்போது மல்லாக்கப் படுத்துவிட்டது.

 

 


அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை யுத்தம் ஆரியத்துக்கும் தமிழியத்துக்கும்தான் நடந்துகொண்டு இருக்கிறது. இடையில் திராவிடன் அறுவடை செய்துவிட்டான். இனியும் ஆரியம் என்பதை வைத்து ஓட்ட முடியாது என்று தெரிந்துகொண்டு 'ஆதிக்கத்துக்கு எதிரானது திராவிடம்' என்கிறான். சரி ஆதிக்கம் என்றால் சாதியா, வர்க்கமா அல்லது அதிகார ஆதிக்கமா என்று கேட்டால் பதில் இல்லை. அடுத்தது சமூகநீதிதான் திராவிடம் என்கிறார்கள். அப்படியென்றால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சமூகநீதி இல்லையா? தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா? சரி அப்படியே வைத்துக்கொள்வோம் என்னதான் உங்கள் சமூகநீதி? நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிறமொழி பேசும் மாநிலத்திற்கெல்லாம் இடஒதுக்கீடு இருக்கிறது. இதுதான் உங்கள் சமூகநீதியா?" 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.