Skip to main content

ஆட்சிக்கு வந்ததும் உங்களை விடமாட்டோம் - ஸ்டாலின் எச்சரிக்கை!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத்தலைவர் அசோகன் இல்லத்திருமண விழா, சோளிங்கர் அடுத்த பிலாஞ்சியில் நடைபெற்றது. சீர்த்திருத்த திருமணமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். பிப்ரவரி 26ந்தேதி காலை திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு அவர் பேசும்போது, "மனிதனை மனிதன் மதிக்கவேண்டும், சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது, ஒருவரை சுயமரியாதையுடன் நடத்தவேண்டும் என்றே பெரியார் சொல்லி அதற்காக பேசி, எழுதி போராடிவந்தார். திமுக தொடங்கியது முதல் என்றுமே சுயமரியாதையை கைவிட்டதில்லை.

 

DMK leader Stalin warning to AIADMK

 

 

சுயமரியாதையுடன் சீர்திருத்த திருமணங்கள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் உழைத்தனர். 1967ல் தி.மு.க ஆட்சி அமைந்து முதலமைச்சராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்று சட்டமன்றத்தில் நுழைந்த பின்பே, பெரியார் கண்ட கனவான இரு மொழிக் கொள்கையை சட்டமாக்கினார், மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு தமிழ்நாடு பெயர் சூட்டினார், சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்கிற சட்டங்களை நிறைவேற்றினார்.

தமிழகம் உருவாக்கி தந்த சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு இன்று தமிழகத்தை ஆட்சி செய்யும் எடப்பாடி மத்தியில் ஆட்சி செய்யும் மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள். மோடியும், எடப்பாடியும் நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் இருக்கிறார்கள். மக்கள் குடியுரிமையைப் பெற்று வாழும் நிலையை ஏற்படுத்திவருகிறார்கள். தமிழகத்தில், அ.தி.மு.க, பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றன. பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றியபோது, இரண்டு அவையிலும் தி.மு.க எதிர்ப்புக் குரல் கொடுத்து ஓட்டுப்போட்டது. பா.ஜ.வுக்கு அடிமையாகவுள்ள அ.தி.மு.க-வும், பா.ம.கவும் தான் அந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போட்டது. இவர்களும் எதிர்த்திருந்தால் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது. இன்று இந்தியா முழுவதும் மக்கள் போராடும் நிலை வந்திருக்காது.

 



அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த நேரத்தில், தலைநகர் டெல்லியில் கலவரம் நடக்கிறது. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை. இந்து சமூதாய மக்களுக்கும்தான் ஆபத்து.  இந்த சட்டத்தின்படி பதிவு செய்ய நாம் பிறந்த தேதி, அதற்கான பதிவு சான்றிதழ், பெற்றோர் பெயர், அவர்கள் எங்கே பிறந்தார்கள், எந்த தேதியில் பிறந்தார்கள், தாத்தா, பாட்டி யார் அதற்கான சான்றிதழை தர வேண்டும் என்கிறது. அப்படிச் சொல்லவில்லை என்றால் சந்தேகநபர் என்கிற பட்டியலில் நம்மை வைத்துவிடுவார்கள்.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குனர், ஆணையர் இருக்கிறார்கள். இவர்களின் வேலை, ஊழல் நடந்தால் முறையாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியிடமிருந்து கடைசியில் இருக்கிற அமைச்சரின் ஊழல் வரை விசாரிக்கவேண்டும். அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திரபாலாஜி மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வருடம் விசாரித்துவிட்டு வேலுமணி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தந்தனர். இதேமாதிரிதான், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்கிறது. ஆனால், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டிலும் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை சொல்கிறது.

வேலுமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை எனச்சொன்ன அதிகாரிகளிடம், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீங்கள் முறையாக விசாரிக்கவில்லை. விசாரணை அறிக்கையை எங்களிடம் தராமல், அரசாங்கத்திடம் தந்தது ஏன் எனக்கேட்டு மரியாதையாகக் கோப்புகளைக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் கொடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளனர்.

அதேபோல் மறைந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ்தான் சொன்னார். முதலமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 40 நிமிடம் ஆவியுடன் பேசினார். பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்றார். அதையடுத்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மூன்று மாதத்தில் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றனர். மூன்று ஆண்டுகளாகிறது, இதுவரை அறிக்கையைக் கொடுக்கவில்லை. மீண்டும் விசாரணை காலத்தை நீட்டித்துள்ளார்கள். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் வெளிவந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறையில்தான் இருக்க வேண்டும்.

இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. திமுக தான் ஆட்சியில் உட்காரும். உங்களை நாங்கள் விடமாட்டோம், ஜெயலலிதா மறைவில் உள்ள மர்மம் முதல் அமைச்சர்களின் ஊழல் வரை விசாரிக்க நடவடிக்கை எடுப்போம், அண்ணன் துரைமுருகன் உங்களை மன்னிக்கலாம், நான் மன்னிக்கமாட்டேன்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.