நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் கட்சியில் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தினகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுக, திமுகவில் இணைந்து வந்தனர். இதில் தினகரன் கட்சியில் இருந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகிய மூவரும் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு தினகரன் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்து புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதன் பின்பும் தினகரன் கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறிய வண்ணம் உள்ளனர். இதோடு சமீப காலமாக தினகரனுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சியான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, சசிகலா தரப்புக்கு சொந்தமான டிவி அதிமுகவிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. அந்த டிவியின் நிர்வாக இயக்குனராக இருப்பது சசிகலா குடும்பத்தினர் தான். இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினரே தினகரனுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது தினகரன் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.