Skip to main content

கோஷ்டி அரசியலால் நெல்லையில் நிறுத்தப்பட்ட உட்கட்சித் தேர்தல்!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

இதுவரை 14 உட்கட்சித் தேர்தலை சந்தித்து ஜனநாயகத்தைக் கட்டிக்காத்த திமுக, ஸ்டாலின் தலைமையிலான முதல் தேர்தலாகவும், கட்சியின் 15- வது உட்கட்சித் தேர்தலாகவும் தமிழகமெங்கும் தேர்தலை நடத்தி வருகின்றது. இந்நிலையில், தங்களுக்குள் எழுந்த கோஷ்டி அரசியலால் தேர்தலையே நிறுத்தி வைத்து தலைமையை சிக்கலில் ஆழ்த்தியுள்ளனர் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர்.


ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெறவுள்ள திமுக உட்கட்சித் தேர்தலில், இன்று முதல் தமிழகமெங்கும் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி கிளைகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகின்றது. கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட திருநெல்வேலி திமுகவில் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆவுடையப்பனும், மேற்கு மாவட்ட செயலாளராக சிவபத்மநாபனும், மத்திய மாவட்ட செயலாளராக அப்துல்வகாப்பும் செயலாற்றி வருகின்றனர். 


இந்நிலையில் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மானூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட 180 கிளைக் கழகத்திற்கும் அவைத்தலைவர், செயலாளர், மேலவை பிரதிநிதி, பொருளாளர், துணை செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு விருப்பமனு பெறப்படும் இடம், அதற்கான பொறுப்பாளர்களையும் முன்னதாக அறிவித்துள்ளார் மாவட்ட செயலாளரான அப்துல்வகாப். இவ்வேளையில், மாநிலத்திலேயே இங்கு மட்டுமே கிளைக்கழகத்திற்கான விருப்பமனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

"40 கிளைக்கழகங்களைக் கொண்ட மானூர் தெற்கு ஒன்றியத்தைப் பொறுத்தவரை விருப்பமனுக்கள் பெறக்கூடிய இடமாக திருமண மண்டம், சமுதாயக்கூடங்கள் என மூன்று இடத்தினை முன்பே அறிவித்தனர். ஆனால் இன்று அறிவிப்பிற்கு மாறாக சுத்தமல்லி விலக்கில் உள்ள ஒன்றிய செயலாளரின் அலுவலகம், வெள்ளாளங்குளத்திலுள்ள ஒரு வீடு மற்றும் நடுக்கல்லூரில் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் மனுக்களை பெற ஆரம்பித்தனர். விருப்ப மனுக்கட்டணமாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.20 என்பதனை தவிர, ஏனைய பதவிகள் அனைத்திற்கும் விருப்ப மனுக்கட்டணம் ரூ.100. விருப்ப மனுவினை வாங்கிய பொறுப்பாளர்கள் மனுக்கட்டணத்திற்கு ரசீதை கொடுக்கவில்லை. 


மத்திய மாவட்டத்திற்குட்பட்ட 180 கிளைகள் கொண்ட இரண்டு ஒன்றியங்களிலும் இதே நிலைமை தான். தங்களுக்கு சாதகமான இடத்தினை தான் மாற்றினார்கள் என்றால் போட்டியிட்டோம் என்பதற்கு ஆதாரமாக இருக்க வேண்டிய ரசீதையும் தர மறுக்கின்றனர் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தரப்பு ஆட்கள். இதில் எங்கிருக்கின்றது உட்கட்சி ஜனநாயகம்..? முன்னாள் எம்எல்ஏ. மாலைராஜாவிற்கும், மாவட்ட செயலாளர் அப்துல்வகாப்பிற்கும் நடக்கும் கோஷ்டி அரசியலால் உண்மையான தொண்டர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்தல் நின்று போனது தான் மிச்சம்." என்கிறார் நெல்லை மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்.

 

இதே வேளையில், "ரசீது இருந்தால் மட்டுமே நாளை பொறுப்பாளர்களுக்கான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள். இல்லையென்றால் விருப்பமனு நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு" என்பதால் விருப்பமனு செலுத்திய சிலர் ஒரு குயர் நோட்டைக் கொண்டு வந்து பணம் செலுத்தியதற்கு பொறுப்பாளர்களிடம் கையெழுத்து வாங்கி சென்றது தனிக்கதை. எனினும், திமுக தலைவராக ஸ்டாலின் வருகைக்கு பின் நடைபெறும் உட்கட்சி தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் விவகாரம் தலைமை வரை சென்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.