Skip to main content

மோடியின் ஆளுமை இதுதானா? கி.வீரமணி

Published on 22/04/2021 | Edited on 22/04/2021
ddd

 

கரோனாவின் இரண்டாவது அலை படையெடுப்பு - இதுவரை தன் பொறுப்பில் எல்லா உரிமைகளையும் வைத்திருந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்பொழுது மாநிலங்களின் தலையில் சுமத்துவது என்பது தன் கடமையைத்தட்டிக் கழிப்பதாகும்! பிரதமர் மோடியினுடைய ஆளுமை என்பது இதுதானா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

 

அறிக்கை வருமாறு:

 

நம் நாட்டில் கரோனாவின் பாதிப்பு காற்று வேகத்தில் இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, முன்பைவிட இப்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. இது வேதனையானதும், சோதனையானதுமான ஒரு காலகட்டமாகும்.

 

பொறுப்பிலிருந்து நழுவுகிறதோ மத்திய அரசு...?

 

முதற்கட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு முழுப் பொறுப்பேற்று கரோனா தொற்று தடுப்பு மேலாண்மையைக் கையில் எடுத்த மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு, மிக முக்கியமான - இக்கட்டான இத்தருணத்தில் தனது கையைக் கழுவி விடுவதுபோல், ‘இனி எல்லாம் மாநிலங்கள் பொறுப்பு’ என்று கூறிடுவது, பொறுப்பிலிருந்து நழுவுகிறதோ என்ற அய்யத்தையே உருவாக்குவதாக இருக்கிறது.

 

பிரதமர் மோடியின் ஆளுமை - கரோனாவைப் பொறுத்தவரை - தலைகீழான ஆளுமையாகவே நடைபெற்று வருகிறது.

 

1. முதலில் கலந்தாலோசித்திருக்க வேண்டியது பிரபல தொற்று நோய் மருத்துவர்களிடமாகும். பிரதமர் தொடக்கத்தில் அதைச் செய்யாமல், இப்போது அவர்களை அழைத்து ஆலோசிப்பது தாமதிக்கப்பட்ட ஓர் ஆளுமை அணுகுமுறையாகும்.

 

2. மாநிலங்களின் பொறுப்புக்கு விட்டு மத்திய அரசு கண்காணிப்பும், மேற்பார்வையும் செய்து வந்தால், அந்தந்த மாநில நிலவரத்திற்கேற்ப ஆங்காங்கே நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்றிருக்கக் கூடும்.

 

பொது சுகாதாரம் என்பது அரசமைப்புச் சட்டப்படி - மாநில உரிமைகள் என்பது ஒருபுறமிருந்தாலும், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவை மாநிலங்கள்தானே!

 

ஆக்கபூர்வ தடுப்பு அணுகுமுறைகள் இல்லை

 

ஒரு சிறு எடுத்துக்காட்டு, மாநிலங்கள் தங்கள் தங்கள் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை வரவழைப்பதை அனுமதித்து, (கண்காணிப்பை நிகழ்த்தி) பாதிக்கப்பட்டோரின் வயது, தேவைகள் இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் மத்திய - மாநில ஆளுமைகள் அமையவில்லை.


பிரதமர் பேசிய பேச்சில் ஆக்கபூர்வ தடுப்பு அணுகுமுறைகள் இல்லை.


முன்பு முழு ஊரடங்கை முதலில் செய்ய யோசனை கூறிய மத்திய அரசும், பிரதமரும் இப்போது ‘‘அது கடைசி ஆயுதமாக இருக்கவேண்டும்‘’ என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டுக் கூறுவது விசித்திரமாக உள்ளது!


‘ஆக்சிஜன் பற்றாக்குறை’ என்ற குரல் மாநிலங்களில் எழுகிறது; ‘‘இல்லை, இருப்பு இருக்கிறது’’ என்கிறது மத்திய அரசு - பின் எப்படி நோயாளிகள் அந்தப் பற்றாக்குறையினால் மரணம் அடையும் வேதனை ஏற்படுகிறது? எங்கோ ஆளுமையில் இருக்கும் இடைவெளிதானே இதற்குக் காரணமாக இருக்க முடியும்!

 

வட மாநிலங்களில் நடைபெறும் அவலங்கள்!

 

வட மாநிலங்களில் பலவற்றில் போதிய படுக்கைகள் ஏற்பாடு இல்லை. வெட்ட வெளியில் பரிசோதனை நடைபெறுவதை ஊடகங்கள் காட்சிப்படுத்தும் அவலமும் உள்ளது!


‘‘உண்மைகளை மறைப்பதால் கரோனாவைத் தடுக்க முடியுமா?’’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் வெளிவந்துள்ள தலையங்கம் (2 ஆம் பக்கம் காண்க) உண்மையை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. மக்களாட்சியில் இந்த அணுகுமுறை நோய் பரவுதலைவிட மிகவும் கொடுமை அல்லவா?

 

தடுப்பூசிக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது ஏற்கத்தக்கதா?

 

எல்லா மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய - மாநில ஆளும் அரசுகளின் தலைமை, உறுதியளித்துப் பிரச்சாரம் செய்துவிட்டு, இப்போது 18 வயதுள்ளவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் போடப்படும் தடுப்பூசிக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது ஏற்கத்தக்கதா?


பேரிடர் நிதி, பிரதமர் உருவாக்கிய தனி அறக்கட்டளை நிதி (‘PM Cares’) இவை இந்த நிதிச் சுமையை ஏற்பதுதானே நியாயம்?

 

தனியார் நிறுவனங்கள் இனி இதை வெளிச்சந்தையில் தாறுமாறு விலையில் விற்கும் நிலையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியுமா?

 

‘குஜராத் மாடல்’ என்று மார்தட்டிய மோடியின் ஆளுமை குஜராத்தில் எப்படிப்பட்ட அடிக்கட்டுமானத்தை அவரது 13 ஆண்டு ஆட்சி கால பொது சுகாதாரத் துறை ஏற்படுத்தியுள்ளது? பொது சுகாதாரத் துறையின் மேன்மையைப் பெருக்கவோ, வளர்க்கவோ மத்திய அரசு, மாநிலங்களில் கடந்த ஓராண்டில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  ‘‘வளர்ச்சி, வளர்ச்சி,’’ ‘சப்கோ சாத், சப்கோ விகாஸ்’ தேர்தல் முழக்கமான நிலை - செயலுருவம் கொள்ளவில்லையே!

 

செயலுருவம் கொண்டிருந்தால், இன்றுள்ள தொடர் வேதனைகள் பற்பல மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்குமா?


‘நீட்’ தேர்வு போன்ற மருத்துவ வளர்ச்சி முட்டுக்கட்டைகள் வேகமான வளர்ச்சியைத் தடுக்கத்தான் பயன்பட்டன என்பதை ஏனோ இன்னமும் ஒப்புக்கொள்ள மோடி அரசு மறுக்கிறது?

 

விரைந்து செயல்படவேண்டியது அவசியம்

 

‘‘Better late than Never’’ ’ இப்போது - ‘‘காலந்தாழ்ந்தேனும் செய்க’’ என்ற அடிப்படையில், பொது சுகாதாரம் - மக்கள் நல்வாழ்வுத்  துறை - அடிக்கட்டுமானத்தை - மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள் இவற்றை நாடு தழுவிய அளவில் - மாநில அரசுத் துறையில் பெருக்கிட தாராளமாக நிதியை ஒதுக்கவேண்டும். 3 விழுக்காடு பொது சுகாதாரத் துறை நிதியை - 6 விழுக்காடாக உடனே உயர்த்தி, கட்சிக் கண்ணோட்டம், அரசியல் கண்ணோட்டமின்றி, மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஆளுமைக் குழுக்களை - ஆலோசனைக் குழுக்களை அமைத்து விரைந்து செயல்படவேண்டியது அவசியம் என்ற பாடத்தை காலம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.


கரோனா இழப்புகள் மீண்டும் திரும்பாமலும், விரிவாகப் பரவாமலும் தடுக்க இப்படிப்பட்ட ஆக்க ரீதியான அணுகுமுறைகளை மத்திய அரசு - மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, செயல்படல் அவசியமாகும்!

 

மக்களாட்சியில் அனுபவங்கள் நமக்குப் பாடங்களாகட்டும்

 

மக்களாட்சியில் அனுபவங்கள் நமக்குப் பாடங்களாகட்டும்; பாடங்களால் ஏற்படும் படிப்பினைகள் நமக்குத் தீர்வுக்கான சரியான பாதையை அமைத்துக் கொடுக்கட்டும்!


அலட்சியமோ, பிடிவாதமோ, தன்முனைப்போ, மக்களாட்சியின் மாண்புகளைச் சிதைத்துவிடும் - மறவாதீர் ஆட்சியாளர்களே!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.