Skip to main content

சுதந்திர இந்தியாவின் வெற்றிகரமான நிர்வாகி பிரதமர் மோடி - அமித்ஷா!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

narendra modi

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக குஜராத் முதல்வராகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 20 ஆண்டுகளில் சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தின் முதல்வராகவும், அதன்பிறகு தொடர்ந்து 7 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் பிரதமராகவும் நரேந்திர மோடி இருந்துவருகிறார்.

 

இந்தநிலையில், நரேந்திர மோடி 20 வருடங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின் தலைவராக இருப்பதைக் கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நேற்று (27.10.2021), "ஜனநாயகத்தை அளித்தல்: அரசாங்கத்தின் தலைவராக நரேந்திர மோடியின் இருபது ஆண்டுகளை மதிப்பாய்வு செய்தல்" என்ற பெயரில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நிர்வாகி நரேந்திர மோடி என தெரிவித்துள்ளார்.

 

நிகழ்வில் அமித்ஷா பேசியது வருமாறு,


"1960களுக்குப் பிறகு 2014 வரை, பல கட்சி அமைப்பு செயல்படுமா என்று மக்கள் கேள்வி எழுப்பிவந்தனர். 2014ஆம் ஆண்டுக்குள் ராமராஜ்ஜிய கனவு சிதைந்து போனது. மக்கள், மிகுந்த பொறுமையுடன், பாஜகவுக்கு வாக்களித்தனர். முதல்முறையாக, காங்கிரஸ் அல்லாத அரசு முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. பணிவின் காரணமாக பிரதமர் மோடி, தன்னை முதன்மை சேவகன் என்று அழைத்துக்கொள்கிறார். ஆனால், அவர் சுதந்திர இந்தியாவின் மிக வெற்றிகரமான நிர்வாகி என்று நான் சொல்வேன்.

 

உங்களைவிட மோடியை யாருக்கு நன்றாகத் தெரியும் என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு. என்னைவிட நாட்டு மக்களுக்கு அவரை நன்றாக தெரியும். கொள்கைகளை வகுக்கும்போது அளவினைப் பார்த்து திட்டங்கள் அனைவருக்குமானதாக வேண்டும் என்று முடிவு செய்தார். முன்பெல்லாம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனாளிகளை மனதிற்கொண்டே திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. 2016இல் பணமதிப்பு இழப்பு  அறிவிக்கப்பட்டபோது, உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஆபத்து இருப்பதை உணர்ந்தோம். ஆனால் மக்கள் மோடியின் பின்னால் நின்று அந்த முடிவை ஆதரித்தனர்.

 

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்திய எல்லையோடு யாரும் எந்த விளையாட்டையும் விளையாட முடியாது என்ற செய்தி உலகத்திற்கே சென்றது. சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு - காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்போது நாட்டில் எங்கும் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை. ராம ஜென்மபூமி மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எந்த முணுமுணுப்பும் ஏற்படவில்லை. நரேந்திர மோடி, இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை உயர்த்தி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்."

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.