கரோனா நிவாரணத்திற்காகப் பிரதமர் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையில் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் சர்வதேச அளவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் பணிகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் கரோனா நிவாரணத்திற்காகப் பிரதமர் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் பென்ஷனில் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் வகையில் தற்போது தொடங்கிய ஏப்ரல் 1 முதல் அடுத்த ஒரு வருடத்திற்குப் பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் சம்பளங்களில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் ரூ .7900 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.