Skip to main content

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்! வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடக்கம்! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Puducherry local government elections in 3 phases! Nomination starts on the 30th

 

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல், 32 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2006இல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2011இல் நிறைவடைந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதனை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தேர்தல் நடத்தப்படவில்லை. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ‘அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது சட்டவிரோதம்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தேவையான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.

 

மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் செய்தியாளர்களுக்கு நேற்று (22.09.2021) நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் அடைந்து 2 முறை உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ளது. இறுதியாக 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை. 2012ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சில பணிகள் முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் பணியைத் தொடர்வதற்கு வசதியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டு அடிப்படையில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.

 

தற்போது முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே புதுச்சேரியில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் 1,149 பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுவதால் மிக அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்பட்டன. புதுச்சேரியில் 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இருந்தது. இதனை சமாளிக்க தெலங்கானாவிலிருந்து 1200, கர்நாடகாவிலிருந்து 1300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. புதுச்சேரியிலுள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள், 108 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடங்கிய 1,149 பதவிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

அதன்படி முதற்கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி மாஹ, ஏனாம் மற்றும் காரைக்கால் நகராட்சிகளுக்கும் கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர்.பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மறுநாள் எட்டாம் தேதி, மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 11ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக அக்டோபர் 25ஆம் தேதி புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறும். இதற்கு 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். 12ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

 

15ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர், பாகூர் ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள பதவிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதற்கு ஏழாம் தேதி முதல் 15ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். 16ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 18ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளாகும். தொடர்ந்து அனைத்து வாக்குகளும் 7 வாக்கு எண்ணிக்கை மையங்களில் அக்டோபர் 31ஆம் தேதி ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என அவர் கூறினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் புதுச்சேரி மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.