Skip to main content

சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு அளித்த விவசாயிகள்...அதிர்ந்து போன முதல்வர் ஜெகன்!

Published on 30/06/2019 | Edited on 01/07/2019

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு ஒன்றை கட்டி குடியேறினார். இதையடுத்து தான் ஆட்சியில் இருக்கும் போதே அந்த வீட்டின் அருகில் சுமார் 5 கோடி செலவில் 'பிரஜா வேதிகா' என்ற மற்றுமொரு புதிய கட்டடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டடம் கட்டும் போதே ஆபத்தான நதிக்கரைக்கு அருகில் கட்டுவதாக என அப்போதைய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து 'பிரஜா வேதிகா' கட்டடம் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன் உத்தரவிட்டார். அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

 

 

andhra pradesh

 

இதைத் தொடர்ந்து அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி அதனை காலி செய்யுமாறு ஆந்திர பிரதேச மண்டல பிராந்திய வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டுவது சட்டவிரோதம். எனவே, அவ்வாறு சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கும் 28 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசும் வீட்டை காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திர அரசு வழங்கிய பாதுகாப்பை குறைத்தும், அவரது குடும்பத்திற்கு வழங்கிய வந்த பாதுகாப்பை முழுவதும் ஆந்திர மாநில அரசு திரும்ப பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

andhra pradesh

 

 

இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் விவசாயிகள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது தலைநகரில் உள்ள கிராமங்களில் வீடு கட்டத் தேவையான நிலத்தை தாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். சில விவசாயிகள், தங்களது கிராமத்தில் நாயுடுவுக்கு வீடு கட்டுவதற்கான செலவை ஏற்கவும் தயார் என அறிவித்து உள்ளனர். 'தலைநகர் பகுதியில் எந்த கிராமத்தில் வசிக்க விரும்புகிறீர்கள் என்பதனை நீங்கள் முடிவு செய்யுங்கள். எங்களது நிதியை கொண்டு உங்களுக்காக வீடு ஒன்றை நாங்கள் கட்டுகிறோம்' என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநில விவசாயிகளின் முடிவால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.