Skip to main content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பிரதமர் மோடி ஏன் புகழ்ந்தார்? - ராஜேந்திரபாலாஜியின் விளக்கம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Rajendra Balaji explains why PM Modi praised MGR and Jayalalithaa

விருதுநகரில் திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட  அதிமுக சார்பில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி,  மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.   

கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது “கிராமங்களில்கூட போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் போதைக் கலாச்சாரம்  பரவிவிட்டது. கடந்த சில நாள்களுக்குமுன், சென்னையில் இருந்து வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்  பொருட்கள் பிடிபட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக், ரூ.2000 கோடிக்கு மேல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து போதைப் பொருள்களை இங்கு கொண்டுவந்துள்ளார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் விதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  

தமிழ்நாட்டின் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றிபெறச் செய்யவேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால்தான், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை, பாலாறு முல்லைப் பெரியாறு பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்.  விருதுநகர் மாவட்டத்தில் 24  ஏக்கரில்,  ரூபாய் 385 கோடி செலவில், அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி காமராஜரின் கனவை நனவாக்கியவர் ஈ.பி.எஸ். அதிமுக கட்சியை ஈ.பி.எஸ். வலுவாக வைத்திருக்கிறார். அதனால்தான், அதிமுகவை அனைத்துக் கட்சிகளும் தேடி வருகிறது.   

தற்போது  திமுக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது. அதுவும் ஈ.பி.எஸ். வற்புறுத்தியதால்தான் தமிழக மக்களுக்குக் கிடைத்தது. பொங்கலுக்கு ரூ.5000 தரவேண்டுமென்று ஈ.பி.எஸ். சொல்லியிருந்தால், ஈ.பி.எஸ்.ஸுக்கு பயந்து ரூ. 5000 கொடுத்திருப்பார்கள். தற்போது ஈ.பி.எஸ். பேசுவதால்தான், தமிழக மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது. 

எல்லோருக்கும் உதவும் எண்ணம் இயல்பாகவே வர வேண்டும். அதனால்தான் மறைந்து 36 ஆண்டுகள் ஆகியும் எம்.ஜி.ஆரை தெய்வமாகப் போற்றி வருகிறார்கள். அதனால்தான், பல்லடம் பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்தது  என்று பெருமையாகக் கூறினார். டெல்லியில் ஈ.பி.எஸ். கை ஓங்கினால்தான், தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கமுடியும்.” என்றார்.   

அதிமுக வாக்குகளைக் கவர்வதற்காக பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவரும்  நிலையில், விளக்கம் அளித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.   

சார்ந்த செய்திகள்