Skip to main content

எரிக்கப்பட்டது ஜெயக்குமார் உடலா? டம்மி பாடியா? சுற்றியடிக்கும் மர்மம்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Mystery continues in the case of Congress leader Jayakumar

காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கில் பல்வேறு மர்மங்களும் புதிர்களும் புயலாய் சுற்றியடிக்கிறது. ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? கரிக்கட்டையாய் கிடந்தது ஜெயக்குமாரின் உடல்தானா? என்று போலீஸ் இந்த நிமிடம் வரை உறுதிப்படுத்தவில்லை.

மே. 2 அன்று மாலை தன் காரில் கிளம்பிய ஜெயக்குமார் நேராக திசையன்விளை சென்றவர் பின்பு அங்கிருந்து மன்னார்புரம் விலக்கு சென்றிருக்கிறார். அங்குள்ள பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டிருக்கிறார். இதுவும் அவரது காரில் சிலர் இருந்ததும் சி.சி.டி.வியில் பதிவாகியிருக்கிறது. பின்பு அங்கிருந்து 2-3 கி.மீ. தொலைவு சென்றவர் வலது புறம் திரும்பி அணைக்கரை போயிருக்கிறார்.

அங்கிருந்து உறுமன்குளம் சென்று தொடர்ந்து பெட்டைகுளம் சென்றவர், நவ்வலடி அருகிலுள்ள குட்டம் போயிருக்கிறார். இந்தக் குட்டம் ஜெயக்குமார் வசிக்கும் கரைச்சுத்து புதூரிலிருந்து ஐந்தே கிலோ மீட்டர் தொலைவில் தானிருக்கிறது. பின்பு அங்கிருந்து தோப்புவிளை சென்ற போது இரவு 9 மணிக்கு மேலாகியிருக்கிறது. அதன்பின் திசையன்விளையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குப் போயிருக்கிறார் ஜெயக்குமார். ஐந்து மணிக்கு மேல் ஏன் இப்படி 45 கி.மீ தொலைவு இரவு வெகு நேரம் சுற்ற வேண்டிய அவசியம் என்ன? காரில் சென்றவர்கள் யார்? என்பதையும் விசாரணையைக் கிளப்பியுள்ள தனிப்படை ஜெயக்குமார் சென்றது வழியோரத்திலுள்ள வீடுகள் பள்ளிகள் மற்றும் சர்ச்களிலுள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஜெயக்குமார் இரவு 10.30 மணிக்கு மேல் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து ஊர் திரும்பிய போதுதான் சம்பவமே நடந்துள்ளது. ஜெயக்குமார் வெளியே செல்கிற போது சிலவேளைகளில் வீடு திரும்பாமல் போகிற இடங்களிலுள்ள வீடுகளில் தங்குவதுண்டாம். பெண் சகவாசமிருக்கலாம் என்ற கோணத்திலும் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாராம்.

Mystery continues in the case of Congress leader Jayakumar

ஜெயக்குமாருக்கு வரவேண்டியதை விட கொடுக்க வேண்டிய கடன் அதிகமிருக்கிறதாம் அந்த நெருக்கடிகளுடன் யாரோ ஒருவர், தொகுதி சீட் பெறுவதற்காக “சி“ அளவு மதிப்புள்ள தொகையை ஜெயக்குமாரிடம் கொடுத்திருக்கிறராம். ஆனால் அவரால் சீட் வாங்க முடியாமல் போனதால் அதற்கான தொகையை அவர் திரும்பக் கேட்க கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி. அதுபோக பிற கடன் நெருக்கடிகளும் சேர, மன உளைச்சல், கடன் நெருக்கடிகளால் திணறியிருக்கிறார் ஜெயக்குமார் என்கிறார் ஏரியா புள்ளி ஒருவர். இந்தச் சூழலில்தான் எரிந்த நிலையில் ஜெயக்குமாரின் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. உடலினருகே கிடந்த ஜெயக்குமாரின் வாக்காளர் அடையாள அட்டை, கிரெடிட் கார்டுகளைக் கொண்டுதான் கொல்லப்பட்டவர் ஜெயக்குமார் என்று போலீஸ் சொன்னாலும், அதனை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

மீளமுடியாத நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் தனக்கு வரவேண்டிய தொகைகளைக் கேட்டால் மிரட்டல்கள் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று இப்படி ஒரு மரண வாக்கு மூலக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு (நடந்ததைப் போன்று) தற்கொலையோ அல்லது கொலை செய்யப்பட்டதாகவோ நம்பக்கூடிய வகையில் இப்படி ஒரு எரிப்பு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம். அதற்காக வேறு ஒருவரின் பாடியைப் பயன்படுத்தியிருக்கலாம். அதற்காக வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை. திசையன்விளையின் பக்கமுள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஏரியாவில் மனநலம் குன்றியவர்கள் சிலரின் நடமாட்டம் உண்டு. சில வேளைகளில் அனாதை பிணமும் கிடப்பதுண்டு. சம்பவத்திற்காக இந்த வகையில் ஒரு பாடியை செட் செய்துகொண்டு வந்து, ஜெயக்குமாரின் உடைகளை அணிவித்து, கல்லில் மேல்வைத்து வயர்களால் கட்டி அடையாளமே தெரியாத வகையில் எரித்திருக்கலாம்.

 Mystery continues in the case of Congress leader Jayakumar

அது ஜெயக்குமாரின் உடல்தான் என்பதைப் பார்பவர்கள் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக உடலினருகில் ஜெயக்குமாரின் வாக்காளர் அடையாள அட்டை, கிரடிட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளைப் போட்டிருக்கலாம் அப்படியான ஒரு சந்தேகமும் எங்களுக்கு உண்டு என்றும் சொல்கிற அந்தப் புலனாய்வு அதிகாரி, இப்படிச் செய்து உலகை நம்ப வைத்துவிட்டு வெளிநாடு போய்விட்டால் சிலகாலம் நிம்மதியாக இருக்கலாம் கடன் தொல்லையுமுிருக்காது என்ற திட்டத்தில் இப்படி ஒரு டிராமா நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் ரகசிய விசாரணை போகிறதாம்.

அது போன்று ஒரு டிராமா நடந்திருந்தால் அதனை உறுதிப்படுத்துகிற வகையிலும் சில சந்தேகங்கள் ஆணித்தரமாகக் கிளம்புகின்றன. பொதுவாக கொலை சம்பவத்தை நிகழ்த்துகிற கிரிமினல்கள் பதற்றத்தில் எரிக்கும் போது அதை அப்படியே எரித்து முடித்து விடுவார்கள். அந்த உடலிலுள்ளவைகள் அது எந்தப் பொருளானாலும் எரிகிற தீயில் எரிந்து சாம்பலாகிவிடுமேயொழிய பாடியின் உடையிலுள்ளவைகளை உடலருகே போடமாட்டார்கள். அப்படிச் செய்தால் தாங்கள் மாட்டிக் கொள்ளலாம் என்கிற பயம்தான். இதுதான் கிரிமினாலஜி தத்துவம்.

ஆனால் ஜெயக்குமாரின் கருகிய உடல் கிடந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தில் உடலருகில் அடையாளம் காணக் கூடிய வகையில் வாக்காளர் அடையாள அட்டை கிரடிட் கார்ட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் கடந்துள்ளன. உடலோடு எரிந்து சாம்பலாக வேண்டிய இந்த அடையாள அட்டைகள் உடலுக்குப் பக்கத்தில் கிடக்க வேண்டிய அவசியமென்ன. இது யதேச்சையான நிகழ்வு அல்ல. இந்த உடல் இன்னார் தான் என நம்ப வேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடையாள அட்டைகள் என்பது அசைக்க முடியாத சந்தேகம்.

Mystery continues in the case of Congress leader Jayakumar

அடுத்து, ஜெயக்குமார் அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற போது (சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்தபோது உள்ள படம்) காக்கி பேண்ட் உடன் வெள்ளை சட்டையை இன் பண்ணியிருந்தார். காலில் ஷூ இடுப்பில் பெல்ட் அணிந்திருந்தார். ஆனால் எரிந்து கிடந்த உடலின் காலில் ஷூ எரிந்த நிலையில் காணப்பட்டாலும், அவர் அணிந்திருந்த பெல்ட் முறு்றிலும் எரிந்து அந்தப் பெல்ட்டின் மாட்டுகிற ஸ்டீலினான கிளிப் எரிய வாய்ப்பில்லை. நிச்சயம் சம்பவ இடத்தில் அது கிடந்திருக்கும். இரண்டு பிரிவு தடயவியல் துறையின் எக்ஸ்பர்ட்கள் சம்பவ இடத்தை ஆராய்ந்து அலசிய போது கூட இடுப்பு பெல்ட்டின் கிளிப் கிடைக்கவில்லை என்பது கனத்த சந்தேகம். இதனால்தான் கிடந்தது ஜெயக்குமாரின் பாடியா. டம்மி பாடியா என்ற சந்தேகம் எங்களுக்குண்டு என்கிறார்கள்.

அதே வேளையில் ஜெயக்குமாரின் குடும்பத்தார்களும் அந்த உடல் ஜெயக்குமாரின் உடலா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு விடை காணும் பொருட்டே ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரினுக்கு டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. புனே அனுப்பப்பட்டுள்ள சாம்பிள்களின் ஆய்வறிக்கையின் முடிவு வந்தால்தான் அசல் பாடியா டம்மி பாடியா எனத் தெரிய வரும் புலனாய்வும் முடிவுக்கு வரும் என்கிறார் அந்த அதிகாரி.

Mystery continues in the case of Congress leader Jayakumar

இதனிடையே நெல்லை வந்த தென்மண்டல ஐ.ஜி.யான கண்ணன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்கள், அவர் எழுதியதுதானா? கையெழுத்து அவருடையதுதானா? என்பது குறித்து தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராமஜெயம் வழக்கினை எடுத்த மாத்திரத்திலேயே கொலை என அறியப்பட்டது. ஆனால் காங். தலைவர் மரணத்தை அவ்வாறு கூற முடியாது. டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதின் ரிசல்ட் வரவேண்டியுள்ளது. வழக்கும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

இதனிடையே பரப்பாடியிலுள்ள கம்பெனி ஒன்றில் அதிக அளவிலான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அங்கே தேர்தல் பரப்புரையின் போது அவர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக கட்சியினர் வாகனத்தில் போயிருக்கிறார்கள். அதுசமயம் அங்கே ஜெயக்குமார் இருந்திருக்கிறார். வாகனத்தில் வந்தவர்களிடம் ஜெயக்குமாரைக் கைகாட்டி அவர் தான் மாவட்ட தலைவர் என்று காட்டப்பட்டதாம். அங்குள்ளவர்கள் மூலமாக இந்தத் தகவலும் தனிப்படைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிற டி.என்.ஏ. ரிசல்ட் புயலையும் பூகம்பத்தையும் கிளப்பலாம்.