Skip to main content

“திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” - தமிழிசை

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Tamilisai said It is shocking to say that the DMK regime is Kamaraj regime

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வந்தே பாரத் ரயில் தற்போது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயில் திட்டத்தினை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி. இதனைப் பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்து ஆள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனைப் பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்தையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது.

நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது. எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார். தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் திமுகவும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார். டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் திமுகவின் சாதனை. திமுகவும் காங்கிரசும் கூட்டணியில் இருந்துக் கொண்டு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை எனவே தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

காவிரி பிரச்சனையில் அதிகாரிகள் நேரடியாக சென்று விவாதிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்க ஏன் தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு காவிரியில் தண்ணீர் கொண்டு வருவதில் தீவிரம் காட்டவில்லை என்று தனக்கு தோன்றுகிறது. கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் எனவே திமுகவினருக்கும் சிறைத்துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிக அளவில் தொடர்பு உள்ளது.

கஞ்சா பொருத்தவரையில் காவல்துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் எந்த அளவில் தொடர்பு உள்ளது என்பது கண்காணிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துகள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். எனவே போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றம் சொன்னதைப் போலவே கஞ்சா பொருட்கள் விற்பனை தொடர்பாக சிறைத்துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கலாச்சாரம் என்பது கஞ்சா கலாச்சாரமாக மாறி வருகிறது. தமிழகம் போதைக் கலாச்சாரமாக மாறி வருவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதலாக்க வேண்டும். கலைஞரைப் பற்றி 9 மற்றும் 10 ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது. தற்போது எட்டாம் வகுப்பிலும் கலைஞரைப் பற்றி இடம்பெற்றுள்ளது.

பாஜக கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும். எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றிய செய்திகள் புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.

தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்கிறார் இந்த ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று; இது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியை காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லிவிட்டார்” என்றார்.

சார்ந்த செய்திகள்