Skip to main content

அரசு பள்ளிகளில் காலை சத்துணவு... முதல்வரின் புதிய திட்டம்...!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக சில புதிய அறிவிப்புகளை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியிருந்தார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதன்படி, இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 

edappadi palanisamy plans to give breakfast to goverment school students

 



அந்த திட்டம் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையினர், திட்டத்தின் நோக்கமும் அதனை செயல்படுத்தும் முறையும் ஏழை எளியவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் வேலுமணி.

அந்த சந்திப்பில், "மாநகராட்சிப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தினால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது. இதனை முன்னோடித் திட்டமாக வைத்து தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளுக்கு இதனை விரிவுப்படுத்துவதன் மூலம் அரசு பள்ளிகளை நோக்கி குழந்தைகளை அதிக அளவில் ஈர்க்க முடியும்" என யோசனை சொல்லியிருக்கிறார் வேலுமணி.

 

edappadi palanisamy plans to give breakfast to goverment school students

 



அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, காலை உணவாக வழங்கப்படும் இட்லி, தோசை, பொங்கலோடு, பயிறு வகைகளையும் இணைத்து காலை சத்துணவாக கொடுக்கலாம் என தெரிவித்திருக்கிறார் என்கின்றனர் உள்ளாட்சித்துறை அதிகாரிகள். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, காலையில் சத்துணவு என்கிற திட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடமும் விவாதித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்