Skip to main content

கொய்யா மரத்தகராறில் அரங்கேறிய கொலை!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Guava tree dispute staged passed away

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது சண்முகம். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் 45 வயது இளையராஜா. இருவருமே கூலி வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றும் சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் இளையராஜா வீட்டில் வளர்ந்த கொய்யா மரத்தின் கிளைகள் சண்முகம் வீட்டின் கூரையின் மீது மோதி கூரையை சேதப்படுத்தி உள்ளது. இதனால் இளையராஜாவுக்கும் சண்முகத்திற்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் சம்பவத்தன்று தன் வீட்டு கூரையின் மீது மோதி சேதப்படுத்தும் கொய்யா மரத்தை வெட்டுமாறு சண்முகம் கூற இளையராஜா  மறுக்க இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இந்தச் சண்டையின் போது  கோபம் அடைந்த இளையராஜா, மரம் வெட்ட வைத்திருந்த அறிவாளை எடுத்து சண்முகத்தின் கழுத்தை வெட்டியுள்ளார். சண்முகம் கழுத்தில் பலத்து வெட்டு காயம் ஏற்பட்டடு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடித்தார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் சண்முகத்தைப் பரிசோதனை செய்தனர். அதில் சண்முகம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் சங்கராபுரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சண்முகம் வீட்டின் கூரையின் மீது இளையராஜா வீட்டு கொய்யா மரம் மோதியதால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் இளையராஜாவால் அறிவாளால் வெட்டப்பட்ட சண்முகம் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சண்முகத்தின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்