Skip to main content

"அழுகிற மாதிரியே இருக்கு... ஏன்னுதான் புரியல" - அகமதாபாத் பிட்ச்சிற்கு ஆஸி. வீரர் ஆதரவு!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கடந்த 24 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி, இரண்டே நாட்களில் முடிவடைந்தது. பகலிரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமே பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இந்திய வீரர்கள் ஓரளவிற்கு சமாளித்தாலும், அஷ்வின் - அக்ஸர் படேல் இருவரின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுருண்டது. இந்தியா அபார வெற்றி பெற்றது.

 

அதனையடுத்து இந்தப் போட்டி நடைபெற்ற மைதானத்தின் பிட்ச்சை, இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், பிட்ச் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் பிட்ச் குறித்துப் புகாரளிக்க இங்கிலாந்து அணி ஆலோசித்து வருகிறது.

 

இந்தநிலையில் அகமதாபாத் பிட்ச்சிற்கு, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நாங்கள் உலகெங்கிலும் சீமிங் (seaming) விக்கெட்டுகளில் விளையாடுகிறோம். 47, 60 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறோம். யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் பந்து சுழலத் தொடங்கியவுடன், உலகில் உள்ள அனைவரும் இதைப் பற்றி அழத் தொடங்குவதுபோல் இருக்கிறது. எனக்கு அது புரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.