![incident of Tirunelveli Medical College Students](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mnmx9b5KreJZhj666zyjdcSqE-aDces3-JQwsM1d20M/1715877439/sites/default/files/inline-images/tvl-ml-hos-art-1.jpg)
திருநெல்வேலியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமார் 650க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அத்தோடு பயிற்சி மருத்துவர்களும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனை வளாகத்த்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்குவதற்காக மாணவர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரு குழுக்களாக பிரிந்து நேற்று (15.05.2024) மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த விடுதியின் துணை காப்பாளர் கண்ணன் பாபு என்பவர் இந்த மோதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி சமரச பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்துள்ளார். இருப்பினும் சமரசம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் கண்ணன் பாபுவின் காரின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
![incident of Tirunelveli Medical College Students](http://image.nakkheeran.in/cdn/farfuture/VWzebJEZgVjaKCiGFUoQ6wLRSM84DxSJl8ZSkUT6EvA/1715877461/sites/default/files/inline-images/tvl-ml-hos-art.jpg)
இதனையடுத்து இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட மாணவர்கள் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் முன்பு விசாரணை ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் மோதல் சம்பவம் குறித்த விளக்க கடிதம் பெறப்பட்டது. அதன் பின்னர் மேலும் மருத்துவ கல்லூரி இயக்குநரின் அறிவுரையின் படி இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மாணவர்கள் மோதல் தொடர்பாக காவல்துறைக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.