Skip to main content

“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..!” “நான் என்ன ஏமாளியா?” ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
admk

 

 

எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமை கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.

 

admk

 

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடியும் பன்னீரும் தனித்தனியாக அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்தபோது, நிரந்தர முதல்வரே வருக என எடப்பாடி ஆதரவாளர்களும், வருங்கால முதல்வரே என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் முழக்கமிட்டு கோஷ்டி பூசலை அம்பலப்படுத்தினர். அதற்கேற்ப உள்ளேயும் நாகரீகமான முறையில் பூசல் வெடித்தது. 28-ந் தேதி கூடும் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்ட இரு தரப்பும் முஷ்டியை உயர்த்துவதால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு திடீர் மவுசு கூடியுள்ளது.

 

admk

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடக்கும் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஓப்பன் பேட்ஸ்மேனாக களமிறங்குவது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமிதான், இம்முறையும் அவரேதான்.

 

‘எனக்கு பிறகும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. இருக்கும் என அம்மா(ஜெ.) சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், கட்சியில் சமீபகாலமாக எதிரொலிக்கும் பிரச்சனைகள் ரசிக்கும்படியாக இல்லை. அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நீங்கள் ரெண்டு பேருமே (இபிஎஸ், ஓபிஎஸ்.) அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் தி.மு.கவையும் துரோகிகளையும்(தினகரன்) வீழ்த்துவதற்கு பயன்தரும்’’ என்றிருக்கிறார்.

 

admk

 

இதனையடுத்துப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், "முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளால் கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்வடைந்திருக்கிறார்கள். தொண்டர்கள் சோர்வடைந்தால் அது கட்சியை பாதிக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி நல்லா இருந்தாதான் ஆட்சியை நாம் மீண்டும் பிடிக்க முடியும். ஆட்சியில் நாம் இருக்கிறோம். ஆனா, இதன் நன்மைகள் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லைங்கிற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் சரி பண்ணுங்கள்'' என்றார்.

 

admk

 

ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகரன், "அம்மாவின் ஆன்மா உண்மையில் ஓ.பி.எஸ்.ஸிடம்தான் இருக்கிறது. அவரது மனதை காயப்படுத்துபோல பல நிகழ்வுகள் நடக்கிறது. அவர் மனம் வருந்தினால் கட்சிக்கு நல்லதில்லை'' என்று முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் எடப்பாடியும் அவருக்கு ஆதரவு அமைச்சர்களும் நடந்து கொள்வதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் பேசிக் கொண்டேயிருக்க, அமைச்சர் உதயக்குமார் சட்டென்று குறுக்கிட்டு, பேச்சின் திசையை மாற்றினார்.

 

 

admk

 

"தேர்தலை எதிர்கொள்ள எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தலைமை அவசியம். அந்த தலைமை உருவானால்தான் ஆட்சியை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும். தேர்தலுக்கு முன்பு சின்னம்மா (சசிகலா) விடுதலையாகும்போது அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தால் நமக்கு வெற்றி நிச்சயம்'' என்று உதயக்குமார் சொல்ல, அதனை அமைச்சர் செல்லூர் ராஜு வழிமொழிய, கூட்டத்தில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

 

admk

 

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா எதிர்ப்பு நிலையை துவக்கத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறோம். இப்போ திடீர்னு அவரை மையப்படுத்திப் பேசினால் எப்படி? பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை விலக்கி வைத்துவிட்டு, கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற கட்டமைப்புக்குள் நாம் இயங்கிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அவரை உள்ளே நுழைப்பது வீண் பேச்சு. கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்மந்த மில்லைன்னு எல்லோரும் சேர்ந்துதானே முடிவு செய்தோம். இப்போ, அதற்கு மாறாக பேசினால் என்னன்னு நினைக்கிறது? சசிகலா விஷயத்தில் கட்சியில் எடுத்த முடிவுப்படி இத்தனை நாள் பேசிய நான் என்ன ஏமாளியா?''’என்று கோபம் காட்டியிருக்கிறார்.

 

admk

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசிய அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும், "தேவையற்ற பேச்சுகள் இங்கு தேவையில்லை. இந்த தேர்தல் நமக்கு சவாலான தேர்தல். அதனால் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தேர்தலில் நமக்கான வெற்றி கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற அந்தச் சூழலில், சில முடிவுகளை தீர்மானித்திருந்தோம். ஆனால், இன்றைய சூழல்களுக்கு அது தேவையில்லை. அதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லிவிட்டு தேர்தலை சந்திக்கலாம். ஒற்றுமையாக, ஒரு மனதாக விவாதிப்போம்’ என்று சொல்ல, முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கு சரிப்பட்டு வராது. தேர்தலுக்கு பிறகுதான் அதனை முடிவு செய்ய வேண்டும்'' என்று வைத்தியலிங்கம் சொல்லவும் சலசலப்புகள் உருவானது.

 

admk

 

சட்டென்று எழுந்த அமைச்சர் சி.வி. சண்முகம், "முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவான கட்சியாக அ.தி.மு.க.வை விமர்சிப்பார்கள். ஏற்கனவே, இப்படி ஒரு முத்திரை நம் கட்சிக்கு இருந்துச்சு. மீண்டும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் வரக்கூடாது. இப்போதுகூட, ஆட்சியில் கிடைக்கும் எல்லா நல்லவைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கே கிடைக்கிற நிலை இருக்கிறது‘’ என்று எடப்பாடியின் சமூகத்தை மனதில் வைத்துப் பேச, எதிர்ப்பு கிளம்பியது. ஆதாரத்துடன் பேசுவதாகவும், கோபத்தை கிளறி, உண்மையைப் போட்டு உடைக்க வைத்துவிடாதீர்கள்'' எனக் காட்டம் காட்டியிருக்கிறார் சண்முகம்.

 

சலசலப்புகள் அடங்கியது. மீண்டும் பேசிய அவர், குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சிங்கிற விமர்சனம் நமக்கு நல்லதல்ல. முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டுத்தான் தேர்தலை சந்திக்கணும்னு மக்களோ தொண்டர்களோ கேட்கலை. அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும்ங்கிறது நம் கட்சியின் பலம். இதில் குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்துவது தேவையில்லாதது'' என்றார் ஆவேசமாக.

 

எல்லாவற்றையும் எடப்பாடி உன்னிப்பாக கவனித்து வந்த நேரத்தில், எழுந்த ஓபிஎஸ், "அதிகாரத்துக்கு அடித்து கொள்வது நம் கட்சியில் யாருக்கும் இல்லாத பழக்கம். அம்மா விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையாக இருந்து நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் சகோதரர் பழனிசாமியிடம் சொல்லி வருகிறேன். அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆட்சியும் கட்சியும் வலிமையாக இருக்க எந்த தியாகம் செய்யவும் நான் தயார். என்னை சந்திப்பவர்களிடமும் இதைத்தான் சொல்லி வருகிறேன்.

 

admk

 

நாம் தீர்மானித்தபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைப்பதுதான் ரொம்ப முக்கியம். இதனை அமைப்பதில் நாம் ஏன் சுணக்கம் காட்ட வேண்டும்? கட்சிக்குள் முரண்பாடுகள் வந்தால் அதனை சரி செய்ய வழிகாட்டும் குழுவை அமைக்கலாம்ங்கிற யோசனை சொன்னவர் நீங்கள்தான். இப்போ, அதற்கு எதிராக இருக்கிறீர்கள். வழிகாட்டும் குழுவை அமைத்து அதன் வழியாக தேர்தலை சந்திப்பதுதான் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார் ஒரே போடாக.

 

இதனை ஏற்க மறுத்த எடப்பாடி, "கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறோம். இதுதவிர, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளோடு விவாதித்துத்தான் எடுக்கிறோம். அப்படியிருக்க புதிதாக ஒரு குழு எதற்கு? தேவையற்ற மனக்கசப்புகளும் குழப்பங்களும்தான் வரும். 11 பேர் எனில் அனைத்து சமூகத்தினரையும் இதில் திருப்திப்படுத்திட முடியுமா? வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியடைய மாட்டார்களா? அதனால் வழி காட்டும் குழுங்கிறது தேவையில்லாதது” என்று சொல்ல, கொங்கு அமைச்சர்களும், எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருக்கும் மற்ற அமைச்சர்கள் சிலரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

 

இதனையடுத்து, செயற்குழு-பொதுக்குழுவினை கூட்டி இறுதி முடிவை எடுக்கலாம் என கே.பி.முனுசாமி சொல்ல, அதனையடுத்து வருகிற 28-ந்தேதி செயற்குழுவை கூட்டுவது என முடி வெடுத்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அறிவிப்பு செய்தனர். கூட்டமும் முடிவுக்கு வந்தது.

 

கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவு அமைச்சர்களிடம் தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி, "அனைத்து அமைச்சர்களையும் சுதந்திரமாக இயங்க அனுமதித்தும் என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? என்னை விட்டு விடுங்கள். யார் தலைமையில் வேண்டுமானாலும் தேர்தலை சந்தியுங்கள். எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வது நான். ஆனா, எனக்கு எதிராகத்தான் இருப்பார்களெனில், நானும் தடலாடி அரசியல் செய்துதான் ஆக வேண்டுமா?'' என்று வெடித்திருக்கிறார் எடப்பாடி. அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே, எடப்பாடியின் சமூக அமைச்சர்களை தவிர்த்து மற்ற சமூகத்தின் அமைச்சர்கள், மா.செக்கள் அனைவரையும் தன் தலைமையில் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டி வருகிறார் ஓபிஎஸ். ஏற்கனவே, இது குறித்து ஒரு ரவுண்ட் பேசி முடித்துள்ள ஓபிஎஸ், தற்போதைய ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீண்டும் அவர்களிடம் விவாதித்துள்ளார். 28-ந்தேதிகூடும் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியும், அதனை தடுக்கும் வியூகத்தில் ஓபிஎஸ்சும் தத்தம் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். செயற்குழுவில் தனக்கான ஆதரவு குரல்களே அதிகம் எதிரொலிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் எடப்பாடி, அதற்காக என்ன விலை கொடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறார்.

 

admk

 

அதனை முறியடிக்க, ஜூனியர் அமைச்சர்கள், மா.செ.க்கள், ஒ.செ.க்கள் பலரையும் தொடர்புகொண்டு, "எடப்பாடியின் ஹிட் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள்; உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை; அவரையா நீங்கள் ஆதரிக்க போகிறீர்கள்?'' என எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் பேசி வருகின்றனர். செயற்குழுவில் வலிமைகாட்ட ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வியூகம் அமைப்பதால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்தபடி இருப்பதால் வெல்லப்போவது யார்? என்கிற சூதாட்டமும் சூடுபிடித்துள்ளது.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.