Skip to main content

சபரிமலை சர்ச்சை: கேரளாவில் என்ன நடக்கிறது...

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
kerala bandh


சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல உச்சநீதிமன்றம் தீர்ப்பு  அளித்ததை அடுத்து, பல பெண்கள் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், சில பக்தர்களும், இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்காமல் போராட்டங்களை நடத்திகொண்டே வந்தனர். சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை யார் எதிர்த்தாலும், அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. 


நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் விடியற்காலையில் இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் போலிஸ் பாதுகாப்புடன் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வை அடுத்து, கோவிலின் நடை சாத்தப்பட்டது. பின்னர், கோவில் நம்புதிரிகள் பரிகாரம் செய்து கோவில் நடையை திறந்து வைத்தனர். இந்த சம்பவங்கள் நடைபெற்றதற்கு முந்தைய நாள் கேரளாவிலுள்ள இடதுசாரி கட்சி, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று  620 கிலோ மீட்டர் தூரம், காசர் கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் அணிவகுத்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் பேர். இதில் பல இடங்களில் இரட்டை வரிசையாக வேறு நின்றிருக்கிறார்கள். இது போன்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற அடுத்த நாள் காலையே இரு பெண்கள் தரிசனம் மேற்கொண்டனர். 
 

kerala bandh


இந்த நிகழ்வை அடுத்து பல இந்து அமைப்புகளும், பாஜகவை சேர்ந்த பெண்களும் போராட்டங்களில் ஈடுபட்டும், இன்று கேரள மாநிலத்தில் இதனை கண்டித்து பந்தும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சபரிமலையில் நடந்த கலவரத்தின்போது, போலிஸார் ஒருவர் காலால் இறுமுடி கட்டியுள்ள சாமியை எட்டு மிதிப்பது போன்று போட்டோஷாப் செய்து சமூக வலைதளத்தில் கேரள காவல்துறை மீது அவதூறு பரப்பிய ராஜேஷ் என்பவர் தற்போது இந்த நிகழ்வை கண்டித்து பாதி மீசை எடுத்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக போலிஸ் மீது அவதூறு பரப்பியதற்காக இவர் மீது வழக்கு தொடரப்படு, தற்போது பெயிலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சபரிமலை கோவிலுக்குள் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா என்ற இருவருக்கும் காவலர்கள் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும், தரிசனம் செய்தவர்களில் ஒரு பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று தவறான செய்திகளை பரப்பிவருகின்றனர். இன்று கேரளா முழுவதும் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததை அடுத்து, முழு கடையடைப்பு நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறையால் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெண்கள் இருவர் தரிசனம் செய்ததை அடுத்து நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியுள்ளார். 'சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த அரசியலமைப்பு பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. சபரிமலையை ஒரு கலவர களமாக  மாற்ற சங் பரிவார் அமைப்புகள் முயல்கின்றன. மேலும் நேற்று நடந்த கலவரத்தில் 7 காவல்துறை வாகனங்கள், 79 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 39 காவலர்கள் இப்போது வரை தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். மேலும் பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்' என கூறியுள்ளார்.


 

 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.