Skip to main content

பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்...   ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக???

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

 

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து அவர் பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தினர். “நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது” என்று ரஜினி கூறி விட்டார். இப்படி அவர் அளித்த பேட்டியும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தன.

 

rajini



துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும் என கூறியுள்ளார். 
 

அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார் என கூறியுள்ளார். 
 

ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு பெரியார் கொள்கை தான் காரணம் என்பதை மறக்க கூடாது, எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
 

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அரங்கில் கூட எடுபடாது. அவரைப் பற்றி கருத்து சொல்லும்போது ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக சொல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். 
 

பாஜக எந்த ரூபத்திலும் தமிழகத்தில் காலுன்ற முடியவில்லை என்பதால் இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கலாம். இரண்டாவது நோக்கம், பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு, மோடி அரசுக்கு எதிர்ப்பு, விலைவாசி ஏற்றம், பொருளாதார கீழ்நிலை போன்றவைகளை திசை திருப்புவதற்காக ரஜினியை ஒரு ஆயுதமாக மத்திய அரசு கையாண்டிருக்கலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். அவரிடம் நான் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்வது, 95 ஆண்டு காலம் இந்த தமிழ் இனத்திற்காகவே போராடிய பெரியார் பற்றி பேசுகிறபோது, யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என்று கூறினார்.


 

பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 
 

அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.
 

நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கும், நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது என்று குஷ்பூ தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதுபோல் நடிகரும், டைரக்டருமான பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

நடிகர் ரோபோ சங்கர், “தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலபேருக்கு எரியுது என்று தெரியவில்லை” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

எந்த விதத்திலும் ரஜினிகாந்த்தை காயப்படுத்த முடியாது. அவரை சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 

ரஜினியின் பேச்சுக்கு இப்படி பிரபலங்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் விதமாக பேசியதாக ரஜினிகாந்த் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்திருந்தார். 
 

அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்குமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 

இதேபோல் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை நகர தலைவர் நேருதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ரஜினிக்கு எதிராக கோவை காட்டுர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார். 
 

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் அதன் நிர்வாகிகள் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், சத்தியமங்கலம் காவல்நிலையத்திலும், கோபி காவல்நிலையம், அம்மாபேட்டை காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

இந்த நிலையில் ஒரு மாற்றத்துக்காக நான் இம்முறை நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தரத் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ரஜினியின் பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது... அதேபோல அவருக்கு வேண்டிய ஒரு சிலர் ஆதரவும் அளித்துள்ளனர். மன்னிப்பு கேட்பதில்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாரா? வருத்தம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.