Skip to main content

சீமான், திருமா பேசிய மேடையிலேயே அவர்களை விமர்சித்த இயக்குநர் கௌதமன்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.  இந்நிகழ்ச்சியில் திருமாவளவன், சீமான், பெ.மணியரசன், இயக்குநர் கௌதமன் முதலானவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பேசிய இயக்குநர் கௌதமன் சீமான் மற்றும் திருமாவளவனின் அரசியல் நிலைபாடுகளை பற்றி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " தற்போது எனக்கு முன்பு அண்ணன் திருமாவளவன் இங்கு சிறப்பாக தன்னுடைய கருத்துக்களை பேசினார். அவர் பேசி முடித்ததும் நான் சில கருத்துக்களை பேச வேண்டும் இருங்கள் என்று கூறியுள்ளேன். நாம் பல விஷயங்களை பற்றி பேசுகிறோம். ஆனால் உடனடியாக அதை மறந்துவிட்டு வேறு ஒன்றிற்கு சென்று விடுகிறோம். சில வருங்களுக்கு முன்பு ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை இழந்தோம். அதற்காக நாம் எதுவும் செய்யவில்லை. இந்தி எதிர்ப்பு போரில் இந்திய ராணுவம் நம்முடைய தமிழ் பிள்ளைகளை கொன்றார்கள். சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரை கொன்றார்கள். நாம் என்ன செய்தோம். அதை பற்றி படிக்கிறோம், பேசுகிறோம். படுத்து தூங்கிவிடுகிறோம். வேறு எதையும் செய்யவில்லை. அப்படி ஏதாவது இந்த 50 ஆண்டுகாலத்தில் செய்திருக்கின்றோமா? தமிழன் ஆள்வதற்கான வழியை ஏதாவது உருவாக்கி வைத்துள்ளோமா? சுதந்திரத்துக்கு பிறகு ஏதாவது அந்த மாதிரியான போராட்டங்களை முன் எடுத்துள்ளோமா என்றால் அப்படி எதுவும் இல்லை. இந்த கருத்தில் இங்கு இருப்பவர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். 
 

j



தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும். அதற்கான வழி என்ன? மேடையில் தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழன் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் என்ன வியூகம் வகுத்துள்ளோம் என்று பார்க்க வேண்டும். சகோதரர் திருமாவளவனும் இதை சொன்னார். இங்கே இருப்பவர்களும் அதையே சொல்கிறோம். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது நடக்குமா என்றால் நடக்காது. இங்கு மதம், சாதி என்று பல்வேறு குறுக்கீடுகள் இருக்கின்றது. புரிதல் இருந்தும் அதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுவதில்லை. தமிழ் கடல் என்று நாம் அழைக்கின்ற நெல்லை கண்ணன் ஐயா சிரித்துக்கொண்டே பேசிய கருத்துக்கு சிறை தண்டனை கொடுத்துள்ளார்கள். ஆனால் வைரமுத்து பற்றி பேசக்கூடாத வார்த்தைகளில் பேசிய ஹெச்.ராஜா சுதந்திரமாக இருக்கிறார். நெல்லை கண்ணன் ஐயா போன்று நாளைக்கு யாரை வேண்டுமானாலும் தூக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய போகிறோம். கத்திபாரா பாலத்தை பூட்டியதற்காக ஆட்டோ டிரைவர்களை சாட்சி சொல்ல காவல்துறையினர் அழைத்து வந்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களை பார்க்கவில்லை என்று கூறி, எங்களை காப்பாற்றி சென்றார்கள். தமிழனை காப்பாற்ற வேண்டும் என்றால் மேடையில் உள்ள தலைவர்கள் மற்றும் மேடையில் இல்லாத தலைவர்களும் இதை உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். நான் தனியாகத்தான் நிற்பேன் என்று சொல்லும் சீமான் அண்ணனும், கூட்டணியோடுதான் நிற்பேன் என்று சொல்லும் அன்புமணி அவர்களும், வேறு வழியே அல்ல என்று கூறி திமுகவோடும் அல்லது அண்ணா திமுகவோடும் கூட்டணிக்கு செல்லும் திருமாவளவன் அவர்களும் நீங்கள் ஒருபோதும் தமிழினத்துக்கு நல்லது செய்யவில்லை என்பதை மட்டும் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். பிரபாகரன் சொல்லியிருக்கிறார் லட்சியத்துக்காக கவுரவத்தை இழக்காலம் என்று, ஆனால் நீங்கள் எல்லாம் கவுரவத்துக்காக லட்சியத்தை இழந்தவர்களாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விடுவீர்கள்" என்றார்.

 

Next Story

“இதெல்லாம் ‘பி.எஸ் 2’ வில் இருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும்” - படக்குழுவுக்கு கௌதமன் எச்சரிக்கை

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

director gowthaman talk about ponniyin selvan movie

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர். 

 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கௌதமன், "பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெறுவது, வசூலை வாரி குவிப்பது எல்லாம் மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், 50 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ் இனத்தின் வரலாற்றை கூறும் போது சரியாக சொல்ல வேண்டும். உலகத்தில் எத்தனையே பேரரசு இருந்திருக்கிறது. ஆனால் சோழ பேரரசு மட்டும் தான் 350 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மன்னர்  வழிவந்தவர்கள் ஆண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பேரரசை சொல்லும் பொழுது நீங்கள் தமிழ் உணர்வுடன் சொல்வது என்பது மிகவும் முக்கியமானது. சோழர்களுடைய கொடி புலிக்கொடி என்று உலகத்துக்கே தெரியும். அப்படிப்பட்ட புலிக்கொடியை உங்களால் படத்தில் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எதற்காக படம் எடுக்க வேண்டும். அப்போ உங்களுடைய நோக்கம் என்ன? 

 

பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன், விஜயால சோழனுக்கு முந்தைய தலைமுறை தெலுங்கர் என்று சொல்கிறார். உங்களுக்கு எல்லாம் என்ன வரலாற்று ஆய்வு இருக்கிறது. தஞ்சையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவனை நீங்கள் எப்படி தெலுங்கர் என்று சொல்கிறீர்கள். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக வைத்து உலகத்தில் உள்ள முக்கால்வாசி நாட்டை ஆட்சி செய்த அவனை ஒரு தமிழன் என்று ஏன் சொல்ல முடியவில்லை. அப்புறம் எதற்கு நீங்கள் இந்த படத்தை கையில் எடுத்தீர்கள். 

 

வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து இல்லை என்று சொன்னதற்கு மட்டும் குதிக்கிறீங்க. ஆயிரம் வருடத்திற்கு முன்பு எங்கே இருந்தது இந்து மதம். சைவம், வைணவம் மட்டும் தானே இருந்தது. இந்து என்ற சொல்லை வெள்ளைக்காரர்கள்தான் கொண்டுவந்தார்கள். இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொண்டுவந்தது என்று இன்றைக்கு இந்துக்களின் அடையாளமாக சொல்லப்படக்கூடிய சங்கராச்சாரியார் எதிர்த்திருக்கிறார். அதையே வெற்றிமாறன் சொன்னால் மட்டும் கசப்பாக இருக்கிறதா. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழர்களுக்கு வைணவம், சைவம் என்று சமயம் இருந்திருக்கிறது. ஆனால் இந்து மதம் இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் எதை மறைக்க பார்க்கிறீர்கள். 

 

'பொன்னியின் செல்வன்' படம் பான் இந்தியா படமாக வெளியாக வேண்டும்  என்பதால் இந்துத்துவாவை பற்றி பேச வேண்டும் என்பதுதான் உங்களின் நோக்கம். இதற்கு ஏன் எங்கள் வரலாற்றை மறைக்க பார்க்கிறீர்கள். ஆதித்த கரிகாலனை யார் கொன்றது, பாண்டியர்களா கொன்றார்கள். வட தமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் ஏன் சண்டை மூட்டி விட பார்க்கிறீர்கள். கல்கி வேண்டுமென்றால் மாற்றி எழுதியிருக்கலாம். ஆனால் தமிழனை தமிழனே கொன்றான் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. தைரியம் இருந்தால் யார் கொன்றார்கள் என்ற உண்மையை சொல்லுங்கள். ஆளுமையுடன் படம் எடுங்கள். தமிழன் தன்னுடைய வரலாற்றை சொல்லவில்லை என்றால், தமிழன் அல்லாதவர்கள் தங்களுடைய வரலாறாக மாற்றுவார்கள் என்பது 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் வெளியே தெரிகிறது. 

 


இந்த மாதிரி வேலையெல்லாம் இரண்டாம் பாகத்தில் இருந்தால், மிகவும் கடுமையான எதிர் விளைவுகளை படக்குழு சந்திக்க வேண்டியிருக்கும்” என காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

இயக்குநர் கவுதமன் திடீர் கைது!

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Director Gautham arrested suddenly

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவிலின் உட்கோட்டத்திலிருக்கிறது குறிஞ்சாங்குளம் கிராமம். கடந்த 1992 மார்ச் 14 அன்று இங்கு இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகொலையானார்கள்.

 

ஊர் பொது மைதானத்தில் காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக மூண்ட விவகாரத்தில் பிரச்சனை கிளம்பியதால் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்தே விவகாரம் அவ்வப்போது தொடர்ந்திருக்கிறது. 2016ன் போது மண்சிலையான காந்தாரி அம்மனை எடுத்துவிட்டு கற்சிலை அமைக்க முற்பட்டபோது அரசின் வருவாய்த்துறையினர் தலையிட்டு சிலையைக் கையகப்படுத்தி அரசு பாதுகாப்பில் வைத்தனர்.

 

Director Gautham arrested suddenly

 

இந்தநிலையில் அண்மையில் பொங்கல் விழாவின் பொருட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடப்பதற்கான முயற்சிகளை ஒருதரப்பினர் மேற்கொண்டபோது இருபிரிவினருக்குமிடையே மீண்டும் விவகாரம் மூண்டு பதற்ற சூழலானது. மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ணராஜ், ஏ.டி.எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள். மார்ச் 14 அன்று படுகொலையானவர்களின் நினைவு தினம் வருவதால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

 

இதனிடையே குறிஞ்சாங்குளம் கிராமத்திற்கு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு இன்று மார்ச் 14ல் அங்கு செல்வதற்காக தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரான கவுதமன் காலை 7.10 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கினார். 144 தடையை மீறி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த கவுதமனை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.