Skip to main content

"ராகுலின் தமிழக பேச்சே பாஜகவின் தீவிரத்துக்குக் காரணம்; எடப்பாடி எல்லோரும் ஓடி விடுவார்கள் என்ற பயத்தினால் இதை..." - மருத்துவர் காந்தராஜ்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

கர

 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அடிக்கடி வந்து கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் பாஜகவைச் சேர்ந்த பலர் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மோடி, அமித்ஷாவின் பயணங்கள் அதிகப்படியான கேள்வியை எழுப்பியுள்ளது. இவர்களின் பயணம் தேர்தல் அடிப்படையிலானதா என்பது குறித்து மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்ற நிலையில் அடுத்த நாளே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். இவர்களின் வருகையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகள் இருந்ததாகப் பரவலாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவற்றைப் பற்றி அவர் பேசியதாகக் கூறப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுதொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? 

 

தேர்தல் வரும் சமயத்தில் யார் வந்தாலும் இதைத்தான் கூறுவார்கள். சொந்தக்காரங்க வீட்டில் துக்க காரியத்துக்கு வந்தால் கூட கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழாமல் இருக்காது. அவர்களுக்குத் தமிழகம் எப்போதுமே தோல்வியைப் பரிசளித்து வரும் ஒரு இடம். ஆகையால் அவர்கள் இங்குத் தீவிரமாகக் கவனம் செலுத்தப் பார்க்கிறார்கள். இதனால் எப்படிப் போனால் யாரை வழிக்குக் கொண்டு வந்தால் வெற்றி வசப்படும் என்ற யோசனையிலிருந்து வருகிறார்கள். ஆகையால் தன்னால் ஆன சாம, பேத செயல்களை எல்லாம் செய்ய முயற்சி செய்கிறார்கள். 

 

அதையும் தாண்டி ராகுல்காந்தி சும்மா இல்லாமல் தமிழகத்தில் உங்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார். அது அவர்களை வெகுவாக சீண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் மிக ஆக்ரோஷமாக ராகுல் பேசினார், உங்கள் ஜென்மத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்திருந்தார். அதைப் பொய்யாக்க வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதனால் கட்சியினருக்கு ஒரு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அவர்கள் ஒவ்வொருவராகத் தமிழகம் வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்திலேயே அதிக நேரம் செலவிடுவார்கள். ஆனால் முடிவு என்ற ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் விரைவில் காண்பார்கள்.

 

தமிழகம் வந்த பிரதமரைத் தனியாகச் சந்தித்துப் பேச எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு முயன்றதாகவும், ஆனால் யாரையும் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் வெளியானது. அதிமுக எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

இதில் நிறையக் கஷ்டத்தில் இருப்பவர் எடப்பாடி, அவருடைய நண்பர்கள் வீட்டில் அதிரடியான சோதனைகள் நடந்து முடிந்துள்ளது. அதில் சில சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளார்கள். அவர்கள் மலையளவு சொத்துக்களை வைத்திருந்தாலும் சிறிய கல் அளவு தற்போது கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அந்த சின்ன கல்லைப் பெயர்க்கும்போது பெரிய மலையே விழுந்துவிடும். அதனால்தான் சொல்கிறேன். எடப்பாடிக்குப் பெரிய சிக்கல் வர இருக்கிறது. இவர் பெரிய தலைவர்களைப் பார்ப்பதால்தான் எடப்பாடியிடம் உள்ள கூட்டமே அவரிடம் தொடர்ந்து இருக்கிறது. அந்த நம்பிக்கை போய்விட்டது என்றால் எடப்பாடியிடம் இருந்து அனைவரும் பிரிந்து வந்துவிடுவார்கள். 

 

அதனால்தான் எடப்பாடிக்கு மிகுந்த கஷ்டமான சூழ்நிலையாக தற்போது இருக்கிறது. தமிழகம் வரும் அவர்களைக் கட்டாயம் சந்தித்துப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. தான் அவர்களோடு நெருக்கமாக இருக்கிறேன் என்பதை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடன் இருப்பவர்களுக்குக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் அவர்கள் சந்திக்க மறுத்தாலும் அவர்களைத் தேடி இவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் பன்னீர் தரப்புக்கு அந்தத் தேவை இல்லை. ஒரு எம்பி இருந்தாலும் அதை வைத்துச் செய்ய வேண்டியதை அவர் செய்து கொள்கிறார். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பன்னீர் தரப்பு செயல்படுவதால் அவர்களுக்கு உண்டான நெருக்கடி குறைந்துள்ளது.

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.