Skip to main content

பணம் கட்ட முடிஞ்சா கட்டிடுங்க... கரோனா வந்தா எங்களுக்கென்ன... தனியார் பள்ளியின் அராஜகம்!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி, பொருளாதார சிக்கலில் தவிகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்திலும், மாணவர்களை அடைத்து வைத்து கட்டாய வகுப்பு நடத்தியதையும்,அடுத்த வருடத்திற்கான கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவதையும் பார்த்து, இது கொரோனாவை விட மோசமான வைரசாக இருக்குதே என்று பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

 

school



திருச்சியில் உள்ள கமலா நிக்கேதன் மான்டிசரி பள்ளி நிர்வாகம் அடுத்த வருடத்திற்கான கட்டணத்தைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. மார்ச் 23 முதல் 30 ஆம் தேதி வரை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியே நாட்களைக் குறித்து அதற்குள் முதல் திருப்புத் தொகையை கட்டிவிட வேண்டும் என்றும், அதைக் கட்டத் தவறியவர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கட்டுபவர்கள் 250 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்ட வேண்டும் என்றும், ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கட்டுபவர்கள் 500 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்ட வேண்டும் என்றும் இதன் பிறகு கட்டாதவர்கள் அனைவரும் பள்ளியின் ரீ-அட்மிஷனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கடுமையாக ஒரு நோட்டிஸ் ஒட்டியும், அதையே இமெயிலிலும் அனுப்பி இருக்கிறார்கள்.

 

school



கரானோ பிரச்சனையில் ஊரடங்கு உத்தரவில் எல்லோரும் வீட்டுக்குள் இருக்கும் நேரத்தில், பணத்தை ஆன்லைனில் கட்டுங்கள் என்று மீண்டும் எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் அறிவிக்கை கொடுக்கவும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
 

இந்த நேரத்தில் எப்படிக் கட்டணம் செலுத்துவது? என்ற கவலையில் இருக்கின்றனர். ஊரடங்கின் போது இப்படி பணம் கட்டச்சொல்வது மனிதாபிமான செயலே இல்லை என்று பெற்றோர்கள் குமுறுகின்றனர்.கஷ்டப்பட்டு வாங்கிய சீட் என்பதால் பள்ளி நிர்வாகத்தைக் கேட்பதற்கும் தயங்குகின்றனர்.திருச்சியில் உள்ள சிபிஎஸ்சி, மான்டிசரி பள்ளிகளிலே அதிகபட்சக் கல்விக் கட்டணம் வாங்குவது இந்தப் பள்ளியில் தான். இந்தப் பள்ளி நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 4,500 மாணவர்கள் படிக்கிறார்கள்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலே இருக்கிறது இந்தப்பள்ளி. அரசாங்கத்தின் எந்தக் கல்விக் கட்டண நிர்ணயத்தையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்வதே கிடையாது.அரசாங்கம் விதித்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.

நோட்டீஸ் குறித்து நாம் மாணவனின் பெற்றோர் போல் பள்ளி நிர்வாகத்திடம் பேசிய போது, "சார்.. இப்போ ஆன்லைனில் பணம் கட்ட முடிஞ்சா கட்டிடுங்க... இல்லைன்னா தேதி நீட்டிப்பு பண்ணுவாங்க, அப்ப கட்டுங்க'' என்று கிடைத்தவரைக்கும் லாபம் என்கிற கணக்கிலேயே பேசினார்கள்.

 

centre



இதே போல ஊரடங்கு காலத்தில் திருச்சியிலேயே இன்னொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது.

21 நாட்கள் ஊரடங்கினால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாகவும், சில மாநிலங்களில் பாதி நடந்த நிலையிலும் ஒத்தி வைக்கப் பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்க வாய்ப்பில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவது இயலாத காரியம் என்பதாலும், பிளஸ்டூ தேர்வு நடத்தி அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின்னரே அது நடத்த முடியும் என்பதாலும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே - 3 ஆம் தேதி நடை பெற இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் சேதுராமன்பிள்ளை காலனியில் இயங்கி வரும் பாயிண்ட் அகாடமியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது. இதில் 10 மாணவர்கள், மாணவிகள் அங்கேயே தங்கிப் படிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு மாணவர்கள் ஊருக்குக் கிளம்பிய நேரத்தில், எல்லோரும் இங்கேயே தங்கியிருங்கள், உங்கள் பெற்றோர் முழுமையான கட்டணத்தைக் கொடுத்து விட்டு அதன் பிறகு செல்லுங்கள் என்று சொல்லி அங்கே தங்க வைத்து வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார்.ஊரடங்கு நெருக்கடிக்கு நடுவே தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் வகுப்புகள் நடந்த நிலையில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வேறு வழியில்லாமல் தங்க ஆரம்பித்தனர்.
 

மாணவர்களை அடைத்து வைத்து வகுப்புகள் நடத்துவது குறித்து ரகசியத் தகவல் வரவும் நாம் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்தோம். உடனே அங்குச் சென்ற காவல்துறை, மாணவர்களை மீட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு, அந்த நீட் வகுப்பு நடத்திய நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

 

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.