Skip to main content

அந்தச் சம்பவத்தை 'அண்ணியார்' மறக்கமாட்டார்! - விவாதத்தில் தேமுதிக தொண்டர்கள்!

Published on 02/03/2021 | Edited on 03/03/2021

 

premalatha vijayakanth cant forget that incident says dmdk partymen

 

2005ல் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த். 2006 சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது தேமுதிக. அதில், பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்தது. 

 

பா.ம.க.வுடனான பேச்சு வார்த்தையை சுமூகமாக முடித்துவிட்டது.  விஜயகாந்தின் தேமுதிகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், "நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு" எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்.கே.சுதீஷ் பதிவு செய்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், சுதீஷ் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

 

அதேநேரம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கிறதா? எத்தனை தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது என்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் அதிமுக தலைமை தங்களை அழைக்கவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். இருப்பினும், அதிமுக தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, "பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்குத் தொகுதி உடன்பாடுகள் முடிக்கப்பட்ட பின்னர்தான் தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியும்" எனக் கூறப்பட்டது.

 

தற்போது, பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படும். மேலும், ஒற்றை இலக்கத்தில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியான தேமுதிக, பாமகவுக்கு இணையான தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தங்களுக்கு வேண்டும் என அடம்பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு இன்னும் இழுபறியாகவே உள்ளது. இதற்கிடையில், "திமுகவின் முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவர், தேமுதிகவிடம் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். அதற்கு, ஏற்கனவே திமுக கூட்டணி நிரம்பி வழிகிறது, இதில் எங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என தேமுதிக தரப்பில் இருந்து பதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்து உங்களுக்கு பங்கீடு செய்கிறோம். அணியில் சேரவேண்டியது மட்டும்தான் உங்கள் பணி, எனத் திமுக தரப்பில் சொல்லப்பட்டதாக" கூறப்படுகிறது. 

 

ஆனால், நம்மிடம் பேசிய சில தேமுதிக தொண்டர்கள், "கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் சுறுசுறுப்பாகக் களத்தில் இயங்கிவருகிறார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது எனக் கூறிவருகிறார். இப்படி இருக்கும்போது திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை நாடிச்சென்றபோது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். இரண்டு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் தேமுதிக கூட்டணி பேசுகிறது என அவப்பெயரை உண்டாக்கினார்கள். இதையெல்லாம் அண்ணியார் மறந்துவிடுவாரா?" எனக் கூறினர். தேமுதிகவின் இன்னொரு தரப்போ, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. பெட்ரோல் விலை 100-ஐ தொடப்போகிறது. கேஸ் விலையும் ஏறிக்கொண்டே உள்ளது. திமுக பக்கம் மக்கள் சாய்வது போலத் தெரிகிறது. அதனால், அதிமுகவில் தேமுதிக இணைவது நல்லதல்ல. ஒன்று, திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். அல்லது, கட்சி இருக்கிறது என்பதைக் காட்ட தனியாக நிற்கலாம்" எனச் சில தொண்டர்கள் புலம்புகின்றனர்.

 

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.