Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்!  

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

லோக்கல் போலீஸ், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. என மாறி மாறி சென்றுகொண்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் கைகளில் சென்றடைந்துள்ளது. முதலில் இந்த வழக்கை விசாரித்த லோக்கல் போலீஸ் எஸ்.பி.பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார். "இந்த சர்ச்சையால் வெளியான வீடியோக்களுக்கு மேல் வேறு எதுவும் இல்லை' என்றார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வசம் வழக்கு சென்றது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யான ராஜேசுவரி இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது.

 

pollachi issues



வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. லோக்கல் போலீசில் ஒரு பெண் கொடுத்த புகாரை தவிர வேறு எந்த புதிய புகாரும் வரவில்லை. அந்தப் புகாரிலும் லோக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை தவிர புதிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட வீடியோவிலேயே ஆறு பெண்கள் இடம் பெறுகிறார்கள். அவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நக்கீரன் அந்த ஆறு பெண்களில் ஒருவரை கண்டுபிடித்து பேட்டியெடுத்து செய்தி வெளியிட்டது. அந்த பெண்ணிடம் கூட புகாரை பெற வழக்கை விசாரிக்கும் ஏஜென்சிகள் தயாராக இல்லை என குமுறல்கள் எழுந்தன.

 

pollachi issues



இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே சொல்ல தயங்குகிறார்கள். அவர்கள் புகார் தெரிவிக்க பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் சந்திக்க முடியவில்லை. எனவே புகார் தெரிவிக்க ஒற்றைச் சாளர முறை ஒன்றை அறிவிக்க வேண்டும். ஒரு உயர் பெண் போலீஸ்அதிகாரி தலைமையில் புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சிகிச்சை, சட்ட உதவிகள், பெண் சமூகவியலாளர்கள் உதவி வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி ராதிகாவும், சென்னை உயர்நீதிமன்ற பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டன.


பாலியல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., "நாங்கள் புதிய குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறோம். அவையெல்லாம் விசாரணை நிலையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினி சி.சரவணன் அடங்கிய பெஞ்ச் "இனிமேல் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிடும். வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் இனிமேல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது. பொள்ளாச்சி வழக்கு மறுபடியும் புது வேகம் பெற்றுள்ளது. அதனால் வழக்கில் தொடர்புடைய ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள் கலங்கிப் போயுள்ளனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 

 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.