Skip to main content

விளக்கு ஏற்றச் சொல்லும் மோடி(யின்) ரகசியம் ! 

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

 

கொரோனாவை எதிர்க்க, 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அமல்படுத்தியிருக்கும் பிரதமர் மோடி, ஏப்ரல் 5 - ந்தேதி இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் மின் விளக்கை அனைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் மூலம் ஒளியேற்றுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்.இந்திய மக்களின் ஒற்றுமையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டவே இதைச் செய்யுங்கள் எனக் காரணத்தையும் சொல்லியிருக்கிறார். 


ஆனால், இதுதான் காரணமா? வேறு விசயங்கள் இருக்கிறது என்கிறார்கள் திராவிட கொள்கையாளர்கள்.நம்மிடம் பேசிய திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்,"பாரதிய ஜன சங்கத்தை பாரதிய ஜனதா கட்சியாக மாற்றப்பட்ட நேரம்தான் ஏப்ரல் - 5, 9 மணி.அதாவது, காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி,  காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.அத்துடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பிரசாத் முகர்ஜி.அவர் விலகிய நாள் 1950, ஏப்ரல் -5 , இரவு 9 மணி. அதன் பிறகு, அப்போதைய  ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின்  தலைவர் கோல்வர்க்கருடன் இணைந்தார். 
 

இதனையடுத்து அவர்கள் இருவரும் இணைந்து,1951- ல் பாரதிய ஜனதா சங்கம் கட்சியைத் தொடங்கினர். அந்த கட்சியின்  அப்போதைய சின்னம்  தீபம் (விளக்கு).அதன் பிறகு, 1980 -ஆம் ஆண்டு , ஏப்ரல் 5 - ந்தேதி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சங்கத்தை 'பாரதிய ஜனதா கட்சி ' என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது. அதனை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.அந்த நாள் ஏப்ரல்-5.  நேரம்,  இரவு 9 மணி. மறுநாள் , ஏப்ரல் 6 -ந்தேதி,  பாஜக தொடங்கப்பட்டதை அறிவித்தனர்.  அந்த வகையில் தற்போது பாஜகவுக்கு வயது 40.  
 

narendra modi


பாஜகவின் 40 - வது ஆண்டு துவக்க தின விழாவைக்  கொண்டாட வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாகத் தேசம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கொண்டாடமுடியாத சூழல். அதனால், பாஜக துவக்கப்பட்ட நாளையும், துவக்கப்பட்ட நேரத்தையும் தேசம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் ஒளியேற்றச் சொல்லியிருக்கிறார் மோடி. 

இந்துக்கள் மட்டுமல்லாமல் கிருஸ்தவர்களும் பகுத்தறிவாளர்கள் மற்றும் மற்ற மதத்தினரும் ஒளியேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்துக்களுக்காக அகல் விளக்கு, கிருஸ்தவர்களுக்காக மெழுகுவர்த்தி, மற்றவர்களுக்காக டார்ச் லைட் என மூன்று விதத்தில் ஒளியேற்றச் சொல்லியுள்ளார். மோடியின் விளக்கேற்றச் சொன்ன ரகசியம் இதுதான் " என விளக்கினார். 


இதற்கிடையே, ஏப்ரல்- 5, இரவு 9 மணிக்கு கடக ராசி, பூசம் நட்சத்திரத்திற்கு கிரகங்கள் மாறுகின்றன. அது, இந்தியாவின் வரைபட அமைந்துள்ள லக்னத்துக்கும், மோடியின் ஜாதகத்துக்கும் நலன் புரிவதாக இருக்கிறதாம்.அந்த நலனை முழுமையாகக் கிடைக்க தேசம் முழுவதும் விளக்கு ஒளியில் ஒளிர வேண்டும் என ஜோதிடர்கள் சொன்ன யோசனையின் படி விளக்கேற்றச் சொல்லியிருக்கிறார் மோடி என ஜோதிடர் உலகத்தில் செய்தி பரவிக்கிடக்கிறது.

 

 


 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.