Skip to main content

நீங்கள் அமித்ஷாவை பாருங்கள் எடப்பாடியிடம் கறார் காட்டிய மோடி!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

தன் மீதான பா.ஜ.க. தலைமையின் கோபத்தை டெல்லி விசிட்டின் மூலம் தணித்துவிடலாம் என்றுதான் நினைத்தார் எடப்பாடி. அது சாத்தியமானதா என டெல்லி தொடர் பாளர்களிடம் விசா ரித்தபோது, "டெல்லியில் 15-ந் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள 14-ந்தேதி மாலையே டெல்லிக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அன்று இரவு நீண்ட நேரம் தூங்கவில்லை. பிரதமருடனான சந்திப்பு குறித்து ரிகர்சல் பார்த்தபடி இருந்தார். பிரதமரிடம் அளிக்கும் கோரிக்கை மனுவையும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொண்டார் எடப்பாடி.

 

modi



நிதி ஆயோக் கூட்டத்துக்கு வரும் முதலமைச்சர்கள் பலரும் மோடியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதமரிடம் 10 நிமிடம் தனியாக பேசவேண்டும் என கடுமையாக முயற்சித்தது தமிழ்நாடு இல்லம், பலனில்லை. அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சகிதம் மோடியை சந்தித்த எடப்பாடி, காஸ்ட்லியான காஞ்சிபுரம் பட்டுச் சால்வை வழங்கி, பூங்கொத்து கொடுக்கும் சம்பிரதாயத்திற்கே 2 நிமிடம் போய்விட்டது.
 

bjp



மத்திய அரசின் நிதி, மேகதாது அணை விவகாரம், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கை மனுவை மேலோட்டமாக ஆராய்ந்த மோடி, "நிதியமைச்சர் நிர்மலாவை பாருங்கள்' என அழுத்தமாகத் தெரிவித்துவிட்டார். "தனியாக 10 நிமிடம் பேச வேண்டும்' என எடப்பாடி கேட்க, அமித்ஷாவை சந்தித்துப் பேசுங்கள். "நான் தெரிந்துகொள்கிறேன்' என்றிருக்கிறார் மோடி. நேரம் முடிந்ததால், முதல்வர் உள்ளிட்டவர்களை அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம்'' என்கின்றனர்.
 

admk



நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி, தமிழக அரசுக்கு தேவையான நிதி குறித்து பேசினார். இதற்கு எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. இந்த நிலையில், காவிரியில் மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி வலியுறுத்திப் பேசியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி அமைதியாக இருந்துள்ளார். கூட்டம் முடிந்ததும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, கஜேந்திர குமார் ஷெகாவத்தை சந்தித்து தமிழக திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார் எடப்பாடி. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் கெடுபிடி காட்டியிருக்கிறார்.
 

admk



இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள், "உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முதல்வர், தேர்தலுக்காக பல புதிய அறிவிப்புகளை செய்யும் திட்டத்தில் இருக்கிறார். அதற்கான நிதி உதவி, மத்திய அரசு மனது வைத்தால்தான் நடக்கும். அதனால் கூடுதல் நிதி பெறமுடியும் என டெல்லி சென்ற முதல்வருக்கு இந்தப் பயணம் ஏமாற்றமாகத்தான் முடிந்தது.


தன்னை சந்தித்து நிதி குறித்து கோரிக்கை வைத்த எடப்பாடியிடம், "நிதி விவகாரங்களில் உங்கள் அரசுக்கு கவனம் போதவில்லை. விரயச் செலவுகள்தான் அதிகம் செய்கிறீர்கள். ஊழல்களும் அதிகமாகியிருக்கிறது. அதற்காகவே புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறீர்கள். காண்ட்ராக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும்தான் பணம் போகிறது' என கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.


மேலும், "நடப்பாண்டில் நீங்கள் எதிர்பார்ப்பதை முழுமையாக மத்திய அரசு தருவதற்கில்லை. மாநிலங்களுக்கான தேவைகளில் சில மாற்றங்களை கொண்டுவர நிதி ஆயோக் அதிகாரிகள் நினைக்கின்றனர். அதனை தெரிந்துகொண்டு பிரதமரிடம் கலந்து பேசிய பிறகு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப் படும். உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள், அப்புறம் முடிவெடுக்கப்படும்' என கறாராக தெரிவித்திருக்கிறார் நிர்மலா. அதனால், இங்கேயும் எடப்பாடிக்கு மூடு அவுட்தான்'' என்கிறார்கள் நிதித்துறையினர்.

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.