Skip to main content

நொண்டி காரணங்களை வைத்துக் கொண்டு படத்தைத் தடை செய்யக் கூறுவதா..? - கே.பாலகிருஷ்ணன் காட்டம்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

l

 

'ஜெய்பீம்' திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, சில வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்திற்குச் சிலர் எதிர்ப்பையும், பலர் பாராட்டையும் ஒருசேரத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு ஆதரவாக அப்போதே பல்வேறு போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினார்கள். தற்போதைய சிபிஎம் தலைவர் பாலகிருஷ்ணன் இதற்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட நிலையில் இதுதொடர்பாக நாம் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு...

 

"அதிகாரத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கலாம் என்ற செய்தி தற்போது மக்கள் மனதில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் யாரும் இந்த மாதிரியான அதிகார துஷ்பிரயோகம் செய்யப் பயப்படும் வகையில் இந்த படம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. இனி இது மாதிரியான தவறு செய்ய யாரும் யோசிப்பார்கள். அந்த வகையில் இந்த மாதிரியான படங்களைத் தயாரித்த அதன் தயாரிப்பு தரப்புக்கும், நடிகர்களுக்கும் நாங்கள் முன்னரே நன்றி தெரிவித்துள்ளோம். 

 

மேலும் இந்த சம்பவத்தின் நிஜ போராளி ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு பார்வதி அம்மாள் பெயரில் 10 லட்சம் டெபாசிட் செய்து அந்த தொகை மூலம் கிடைக்கும் வட்டியை பார்வதி அம்மாளுக்கு கிடைக்கும் படி செய்துள்ளார். மேலும் பார்வதி அம்மாள் மறைவுக்குப் பிறகு இந்த பணம் அவர்களது குடும்பத்துக்குப் போய் சேரும் வகையில் இந்த உதவியைச் செய்துள்ளார்.

 

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் திரைப்படமாகக் கொண்டு வருவது என்பது மிக அரிதாக நடைபெறும் ஒன்று. இது தற்போது நடைபெற்றுள்ளது. அந்த படம் சொல்கின்ற செய்திகளை இந்த சமூகம் பாராட்டுகிறது. சில விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அனைத்து தரப்பு மக்களையும் யாரும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்திவிட முடியாது. இந்த படம் சொல்லும் செய்தியை மட்டும்தான் பார்க்க வேண்டும். இந்த படம் யாரையும் காயப்படுத்துவதோ, அல்லது குறிப்பிட்ட சமூகத்தை அவமானப் படுத்தவோ இல்லை என்பதைத் தயாரிப்பாளர்களும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். 

 

பல நல்ல காரணங்கள் இந்த படத்தில் இருக்கையில் சில நொண்டி காரணங்களைக் கண்டுபிடித்து அந்த படத்தைக் குற்றம்சாட்டுவது, படத்தை ஓடவிடமாட்டேன் என்று கூறுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சூரியாவை நடமாட விடமாட்டேன் என்று கூறுவதெல்லாம் அராஜகத்தின் உச்சமாகத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

 

இந்த மாதிரியே போய்க் கொண்டிருந்தால் யாரும் தமிழ்நாட்டில் படமே எடுக்க முடியாத நிலைமைக்குச் சென்று விடுமே?  தமிழ்நாட்டுத் திரையுலகம் என்ன ஆகும். எனவே இது அராஜகத்தின் வெளிப்பாடு, இப்படிப்பட்டவர்களின் பேச்சை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத, அதிகார மனோபாவம் பிடித்த இந்த மாதிரியான நபர்களை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்பதே சரியான முடிவாக இருக்கும். எனவே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருப்பவர்களைத் தாண்டி இந்த மாதிரியான திரைப்படங்கள் வருவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதவாறு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார். 

 

 


 

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.