Skip to main content

அரசியலில் சிக்கிய சந்திரயான்-2 அதிரடி ரிப்போர்ட்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

ஒரு மகத்தான சாதனையின் தொடக்கப் புள்ளி சிறப்பாகவே அமைந்தது. கடைசிப் புள்ளிக்கு சற்று முன்பாகத்தான் எதிர்பாராத சறுக்கல். சந்திரயான்-2 திட்டத்தை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். செப்டம்பர் 6-ஆம் தேதி பௌர்ணமி நிலவைப் போல பளிச்சென இருந்த இந்தியர்களின் முகம், செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை சந்திரயான்-2 லேண்டர் நிலவில் இறங்குவதில் ஏற்பட்ட தோல்வியால் அமாவாசை நிலவைப்போல இருண்டு சோகத்தில் ஆழ்ந்தது.

 

chandrayan



கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. குறிப்பிட்ட தூரத்துக்குப் பின் ராக்கெட்டிலிருந்து பிரிந்த சந்திரயான் 2 புவிவட்டப் பாதையை சுற்றிவரத் தொடங்கியது. ஆரம்பகட்ட வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தைத் தர, அதன் சுற்றுவட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தனர். ஆகஸ்டு 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் கால்வைத்தது சந்திரயான். 48-ஆம் நாள் நிலவில் லேண்டரைத் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. அடிப்படையில் சந்திரயான்-2 ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று கலன்களின் தொகுப்பு. சந்திரயான்-2 எனப்படும் சுற்றுவட்ட கலன், அதிலிருந்து நிலவில் இறங்கும் விக்ரம் என பெயர்சூட்டப்பட்ட தரையிறங்கு கலன். அதிலிருந்து பிரிந்து நிலவை ஆராயும் பிரக்யான் ஆய்வூர்தி. கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி தரையிறங்கு கலமான விக்ரம், ஆர்பிட்டர் எனும் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக சுற்றிவரத் தொடங்கியது.


நிலவின் தென்துருவப் பகுதியான "மான்சினஸ் சி' மற்றும் "சிம்பிலியஸ் எஸ்' எனும் இரு பள்ளங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் சமதளப் பகுதியில் தரையிறங்கு கலனை இறக்குவதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டம். திட்டப்படி, கடைசிக் கட்டத்தை நெருங்கியபடியால் விஞ்ஞானிகள் உற்சாகமும் பரபரப்பும் அடைந்திருந்தனர். இதற்கிடையில் இஸ்ரோ நிறுவனம் நடத்திய புதிர் போட்டியில் வெற்றிபெற்ற 70 மாணவர்கள், நிலவில் சந்திரயான்-2 தரை யிறங்குவதை இஸ்ரோ விலிருந்து நேரடியாகக் காண வசதி செய்யப் பட்டிருந்தது. பிரதமர் மோடி, இந்த அபூர்வ நிகழ்வைக் காண நேரடியாக இஸ்ரோ வந்திறங்கியது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது.

நிலவில் வளிமண்டலம் இல்லையென்பதால், அங்கே விக்ரம் தரையிறங்கு கலத்தை பாரசூட் மாதிரியான எளிய யுக்திகளால் தரையிறக்க முடி யாது. கலம் அதன் சொந்த ராக்கெட் இன்ஜின்க ளின் வேகத்தை ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாகக் குறைத்து, கடைசியில் 4 கால்களும் பதிவது போல தரையிறங்கியாகவேண்டும். இதற்கு "சாஃப்ட் லேண்டிங்' எனப் பெயர். சுமாராக 15 நிமிடம் பிடிக்கும். இதற்கான தொழில்நுட்ப பணிகளில் விஞ்ஞானிகள் மும்முரமாகக் காணப்பட்டனர். விக்ரம் தரையிறங்கு கலம் 1.30 மணிக்கு தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், ஒன்பது நிமிடங்கள் தாமதமாகத் தரை யிறங்கத் தொடங்கியது. சரியாக 1.54-க்குள் திட்டமிட்டபடி தரையிறங்கியாகவேண்டும். கிட்டத்தட்ட நிலவிலிருந்து 150 கிலோமீட்டர் உயரத்திலிருந்து அதன் நான்கு இன்ஜின்களையும் இயக்கி விக்ரம் லேண்டர் வேகமாகத் தரை யிறங்கும். தரைக்கும் கலத்துக்குமான தூரம் 1 கிலோமீட்டர் இருக்கும்போது நான்கு இன்ஜின்களும் அணைக்கப்பட்டு பத்திரமாகத் தரையிறக்குவதென ஏற்பாடு.

நிலவிலிருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் கலம் இருக்கும்வரை திட்டப்படி எல்லாம் சரியாகவே நடைபெற்றது. அப்போதுதான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. திடீரென விக்ரம் கலத்துடனான சிக்னல் அறுந்தது. இதையடுத்து பதட்டமடைந்த விஞ்ஞானிகள் மீண்டும் சிக்னலை ஏற்படுத்த வேகமாக முயற்சிகள் மேற்கொண்டனர். அது மீண் டும் மீண்டும் தோல்வியில் முடியவே நிலவிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் சுற்றுவட்ட கலத்துடன் தொடர்புகொள்ள முயன்றனர். அங்கிருந்து சிக்னல் கிடைத்தது. ஆனால், விக்ரம் கலத்துடனான சிக்னல் அறுந்தது அறுந்ததுதான்.

நிலவில் விக்ரம் கலம் தரையிறங்குவதை நேரில் காணச்சென்ற பிரதமர் மோடி, நடந்த துரதிர்ஷ்டங்களை விஞ்ஞானிகளிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு இஸ்ரோ தலைமைப் பொறுப்பி லுள்ள சிவனின் முதுகில் தட்டிக்கொடுத்து ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தார். சிவனின் கண்ணீரும் பிரதமரின் தட்டிக்கொடுத்தலும் ஊடக கேமராக்கள் முன் நடைபெற, அதையும் "தேசபக்தி' அரசியல் வியாபாரமாக மாற்றுவதில் கூடுதல் அக்கறை செலுத்தியது பா.ஜ.க. தரப்பு. "கிரிக்கெட் தொடங்கி ராக்கெட் வரை இந்திய மக்களுக்கு இயல்பாகவே தேசபக்தி உண்டு. அதைக்கூடவா அரசியலாக்குவது' என்ற சர்ச்சையும் வெளிப்பட்டது.

சந்திரயான்-2 வெற்றியடைய வேண்டுமென ஒட்டுமொத்த இந்தியர்களின் மனப்பூர்வமான பிரார்த்தனை ஒருபக்கமிருக்க, சந்திரக் கடவுள் கோவில்கொண்டுள்ள திங்களூர் கோவிலிலும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. சர்வதேச ஊடகங்கள் இஸ்ரோவின் முயற்சியை "முழுத் தோல்வியல்ல' என்றே விமர்சித்துள்ளன. தரையிறங்கு கலனுடனான தொடர்பை இழந்தபோதும் நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் சுற்றுவட்ட கலன் ஒருவருடம் அங்கிருக்கும் என்பதால் இத்திட்டம் 95 சதவிகிதம் வெற்றிதான் என நம் விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.

செப்டம்பர் 8-ஆம் தேதி லேண்டரை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சாஃப்ட் லேண்டிங் ஆவதில் பின்னடைவு ஏற்பட்டதால் சிக்னல் கிடைப்பது பெரும்பாடு என்கின்றனர். நிலவைத் தொடும் ஆபரேஷனில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அதை அரசியலாக்குவது அடுத்தகட்ட முயற்சிகளுக்கு சோதனையாகிவிடும்.

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.