Skip to main content

பாமகவுக்கு அந்த இடத்தை ஒதுக்காதீங்க... தேமுதிக, தமாகாவுக்கு... அதிமுக சீனியர்கள் மேலிடத்தில் வலியுறுத்தல்

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

 

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை தாரைவார்க்காதீர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருகின்றனர் அதிமுக சீனியர்கள்.
 

அவர்கள் மேலும், இப்ப நாம ஆளும் கட்சியாக இருக்கிறோம். இப்போதைக்கு பிரச்சனையில்லை. இரண்டு முறை தொடர்ந்து நாம் ஆட்சியில் இருந்துவிட்டதால் 2021 நமக்கு எப்படி ரிசல்ட் வருமுன்னு தெரியாது. அதோட இப்ப இருக்கிற எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுத்து ஜெயிக்க வச்சது ஜெயலலிதா. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு சீட் கொடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் வர வாய்ப்பு இருக்கு. அதற்கு முன்பு நடக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாண்மையான இடங்களில் நாம் போட்டியிட்டால், பல பேர் எம்எல்ஏ சீட் கேட்பதில் இருந்து விலகலாம். 

 

admk


 

கட்சிக்கு மரியாதை சமூகத்தில் கிடைக்கணும் என்றால் நம்ம கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவிகளில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தேனியைத் தவிர முழுக்க முழுக்க தோல்வி. ராஜ்யசபாவிலும் சொல்லிக்கொள்வதைப்போல இல்ல. அதனால்தான் சொல்கிறோம் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு பதவிகளை பிடிக்க வேண்டும். 
 

எக்காரணத்தைக் கொண்டும் சேலம், சென்னை மேயர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். சேலத்தில் உங்கள் சொந்த மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால், மேயர் பதவியையாவது பிடித்தாகணும். நாளைக்கு உங்களுக்கு அங்கு லோக்கல் செல்வாக்கு அதிமுக இருந்தால்தான் கிடைக்கும். 


 

பாமகவுக்கு சேலத்தை கொடுத்தீர்கள் என்றால், இன்றைக்கு அது கூட்டணியில் இருக்கிறது. நாளை கூட்டணியை விட்டு வெளியேறி நமக்கு எதிராக பேசினால் என்ன செய்வது. இப்பவே சில விசயங்களில் அவர்கள் ஒத்துவரவில்லை. எட்டுவழிச்சாலையில் அதிமுகவின் நிலைபாடு என்ன? பாமகவின் நிலைபாடு என்ன? சேலத்தை பாமகவுக்கு கொடுத்தால் நாமே நமது தலையில் மண்ணை அள்ளி போட்ட மாதிரி இருக்கும். ஆகையால் சேலம் மேயர் பதவியில் அதிமுகதான் போட்டியிட வேண்டும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் எந்த மேயர் பதவியை பிடிக்கிறோமோ இல்லையோ, சென்னை மேயர் பதவியை பிடித்தே ஆக வேண்டும். அதுதான் கட்சிக்கு மரியாதை. ஆகையால் சென்னை மேயர் பதவியிலும் அதிமுகதான் போட்டியிட வேண்டும். 


 

கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை நம்மை இல்லாமல் டெல்லியை அணுக முடியாது என்ற கட்சிக்கு சீட் கொடுங்க. நம்மை இல்லாமலேயே பாமக, தேமுதிக டெல்லியை சந்திக்கிறது. மத்திய அமைச்சர் பதவி, இணையமைச்சர் பதவி என முயற்சி பண்ணுகிறார்கள். கடந்த வாரம் ஜி.கே.வாசனும் பிரதமரை சந்திக்கிறார். அதிமுகவைவிட அந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதா என்ன? 
 

ஒவ்வொரு தேர்தல் முடியும்போது, கூட்டணியோடு வைத்திருந்த கணக்கு அதோடு முடிந்துபோகணும். அடுத்தத் தேர்தலுக்கு கணக்கு புதிதாகத்தான் போடணும். ஆகையால மேயர் பதவி உள்ளிட்ட கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய எந்த பதவியையும் கூட்டணிக்கு ஒதுக்காதீங்க. நம்ம கட்சிலேயே ராஜ்யசபா சீட் கிடைக்காதவங்க, நிறைய பேர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்காங்க. அவர்களை கவனியுங்கள் இல்லையென்றால் இவரை நிறுத்தினால் இந்த இடத்தில் வெற்றி என்கிற வேட்பாளரை நிறுத்துங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லி வருகிறார்களாம். 
 


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.