தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு, தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், அடுத்ததாக தான் இயக்கவுள்ள படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு, பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப்பை நேற்று (24.08.2021) சந்தித்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, "என்னவொரு சிறந்த விருந்தோம்பல். நன்றி கிச்சா சுதீப். நீங்கள் சிறந்த சமையல்காரர். நம்முடைய படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. கிச்சா சுதீப், ‘நான் ஈ’, ‘புலி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானது குறிப்பிடத்தக்கது.