ADVERTISEMENT

"எந்த வார்த்தையை பயன்படுத்தி நன்றி தெரிவித்தாலும் பத்தாது" -உதவியவர்களை பாராட்டிய சூர்யா

11:53 AM Nov 02, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. ஒரு நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூகநலப் பணிகளையும் செய்து வருகிறார். அகரம் என்ற அறக்கட்டளையை நிறுவி, வறுமையால் கல்வியை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு, கல்வியை தொடர உதவி செய்து வருகிறார். கடந்த பத்து வருடங்களில் அகரம் அமைப்பு, மூவாயிரம் மாணவர்களை படிக்கவைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், சூர்யாவே நடித்து தயாரித்த படமான சூரரைப் போற்று படம், கரோனா பாதிப்பால் திரையரங்கில் வெளியாகவிருந்த நிலையில் கரோனா பாதிப்பால் ஓ.டி.டி. தளமான அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அப்படம் விற்பனையான தொகையிலிருந்து ஐந்து கோடியை, கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கும், கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பணியாற்றுபவர்களுக்கும் பகிர்ந்தளிக்கபோவதாக சூர்யா அறிவித்திருந்தார். திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு இரண்டரை கோடியும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், மயான தொழிலாளர்கள் என கரோனா தடுப்பில் களத்தில் நின்று பணியாற்றியவர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகையாக இரண்டரை கோடியும் தரப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இக்கல்வி உதவித்தொகை அகரம் மூலம் தரப்படும் என குறிப்பிட்டிருந்த சூர்யா, அதற்கான விண்ணப்ப படிவத்தையும் வெளியிட்டருந்தார்.

அதைத்தொடர்ந்து, இக்கல்வி உதவித்தொகையை கோரி, அகரம் அறக்கட்டளைக்கு 22,000 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. இதைத் தொடர்ந்து அகரம் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், விண்ணப்பித்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று தகுதியான மாணவர்களை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3,240 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க பாலமாக விளங்கிய தன்னார்வலர்களை, நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சூர்யா, "அன்புக்குரிய அகரம் தன்னார்வலர்களே, நீங்கள் தேவதைகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. இந்த கரோனா தொற்றுக் காலத்தில், வெவ்வேறு இடங்களுக்கு பயணித்து 3,240 குடும்பங்களுக்கு உதவியிருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்தி நன்றி தெரிவித்தாலும் பத்தாது" எனக் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT