எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். தமிழகம் முழுவதும் 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வந்த கமல்ஹாசன், தனது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும் அதன் பிறகு சில தினங்களுக்கு ஓய்வு எடுக்கப்போவதாகவும் கடந்த ஞாயிறன்று (17.01.2021) அறிவித்தார். இந்த நிலையில், இன்று (19 ஜன.) அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவரது மகள்களான சுருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாகவும் இன்னும் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு கமல்ஹாசன் வீடு திரும்ப உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.