'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அடுத்ததாக 'பொதுவாக என் மனசு தங்கம்' 'டிக் டிக் டிக்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். 'டிக் டிக் டிக்' வெற்றியை அடுத்து இவர் நடிப்பில் பார்ட்டி, திமிரு பிடிச்சவன், ஜெகஜால கில்லாடி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தன் சினிமா பயணம் குறித்து நிவேதா பெத்துராஜ் மனம் திறந்து பேசியபோது...
"பிறந்தது மதுரை என்றாலும் துபாயில்தான் வளர்ந்தேன். இப்போதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மதுரை சென்றுவிடுவேன். அழகிப் போட்டியில் என்னைப் பார்த்துவிட்டு முதல் பட வாய்ப்பு வந்தது. அனுபவத்திற்காக ஒன்றிரண்டு படங்கள் நடித்துதான் பார்ப்போமே என்று வந்தேன். முழுநேர நடிகையாகி விட்டேன். சினிமாவில் இயக்குனர் ஆக ஆசை வந்துள்ளது. ஓவியம் வரைவேன். கார் நன்றாக ஓட்டுவேன். பந்தயங்களில் கூட கலந்துகொண்டுள்ளேன். சினிமாவில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் துபாய்க்கே சென்றுவிடுவேன்" என்றார் நிவேதா.