கன்னட நடிகர் யஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கன்னடம், தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் 'கே.ஜி.எஃப்'. அதிரடி சண்டை காட்சிகள், தெறிக்கும் பின்னணி இசை மற்றும் வசனம் என ஆக்ஷன் சினிமா ரசிகர்களைக் கொண்டாட வைத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பூஜையுடன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் கே.ஜி.எஃப்பின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியான நிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கின் முதலாம் கட்ட தளர்வில், படப் பிடிப்புகளுக்கு கர்நாடக அரசு அனுமதியளித்த நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி ஷூட்டிங்கை தொடங்கியது.
இந்த நிலையில் அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரதில் நடிக்கும் ரவீனா டாண்டனின் பிறந்தநாளையொட்டி அவரின் கதாபாத்திரத்தின் லூக் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் ராமிகா சென் என்னும் அரசியல்வாதியாக நடிக்கிறார்.
'கே.ஜி.எஃப் - 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் தத் கலந்துகொண்டவுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் ஆதிரா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.