பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.
கரோனா நெருக்கடி காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படக்குழு மீண்டும் பணிகளைத் தொடங்கியது. தற்போது, இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' தொடர்பான அப்டேட் கடந்த 19-ம் தேதி வெளியானது. அதில், வரும் 21-ம் தேதி காலை 10.08 மணிக்கு படக்குழுவிடம் இருந்து உங்களுக்கு விருந்து உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, படத்தின் டீசர் தொடர்பான அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 8-ம் தேதி காலை 10.18 மணிக்கு கே.ஜி.எப் சேப்டர் 2 படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட பிரம்மாண்ட அளவில் இரண்டாம் பாகம் தயாராகி வருவதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகமாகியுள்ளது.